தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி? தொங்கு சட்டசபை தொடர்ந்தால் ஆளுநருக்கு இருக்கும் தனி அதிகாரம் என்ன?
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் குழப்பம் தொடர்கிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அடுத்து என்ன என்பதில் தொடர்ந்து குழப்பம் இருக்கிறது. இதுபோன்ற சூழல்களில் ஆளுநரிடம் அதிகாரம் என்ன.. பல நாட்கள் எந்தவொரு கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அப்போது என்ன நடக்கும் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அவர்களுக்கு இப்போது காங்கிரஸ் ஆதரவும் வந்துள்ள நிலையில், பலம் 113ஆக உயர்ந்துள்ளது. இது பெரும்பான்மைக்குத் தேவையான 10 இடங்களை விடக் குறைவு என்றாலும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஆளுநர் மாளிகையில் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை.

தமிழக ஆளுநர்
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், வெறும் நம்பர்களை மட்டும் பார்க்காமல்.. அமையப்போகும் அரசு எவ்வளவு காலம் நிலைக்கும் என்பதையும் ஆராயும் அதிகாரம் அவருக்கு உண்டு.
இந்திய அரசியல் சாசனத்தின் 163வது விதியின்படி, ஒரு கட்சிக்குத் தெளிவான பெரும்பான்மை இல்லாதபோது, அதாவது தொங்கு சட்டசபை அமையும்போது, யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது முடிவெடுக்க ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கிறது. சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளின்படி, ஆளுநர் ஒரு முன்னுரிமைப் பட்டியலைப் பின்பற்ற வேண்டும்.
அடுத்து என்ன
முதலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி.. ஆனால், இங்குத் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், முறையே அடுத்து தனிப்பெரும் கட்சிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கும் தான் அழைப்பு விடுக்க வேண்டும். இருப்பினும், இது பரிந்துரை தானே தவிர விதி இல்லை. இதனால் ஆளுநர் தனது விருப்பத்திற்கு ஏற்ப முடிவு எடுக்கலாம். அதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிரது.
தற்போது விஜய்யின் தவெக 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து அவர் காட்டும் 112 முதல் 117 வரையிலான நம்பர் நிலையானது தானா.. அவரால் நிலையான ஆட்சியை தர முடியுமா என்பது குறித்து ஆராயும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது.
ஜனாதிபதி ஆட்சி
ஒருவேளை சட்டமன்றத்தில் எந்தக் கட்சியாலும் ஒரு நிலையான ஆட்சியை வழங்க முடியாது என ஆளுநர் கருதினால், அவர் விதி 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யலாம். இருப்பினும், கடைசிக்கட்ட முயற்சியாக மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு முன்பாக பல வழிகள் குறித்தும் ஆளுநர் பரிசீலனை செய்வார். இப்போது விஜய் தரப்பு 107+5 என்ற நம்பரை சொன்னாலும், ஆளுநர் மாளிகை அதீத எச்சரிக்கையாக இருக்கிறது. ஒருவேளை ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே அது கவிழ்ந்தால் ஏற்படும் அரசியல் குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை என்கிறார்கள்..
கர்நாடகா, மகாராஷ்டிரா
கடந்த காலங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா எனப் பல நேரங்களில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார் என்பது பேசுபொருள் ஆகியிருக்கிறது. அது தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளன. எனவே, இப்போது தமிழக அரசியலில் இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும்போது, அடுத்த 2 நாட்கள் ரொம்பவே முக்கியம்! ஆளுநர் மாளிகை சொல்லப்போகும் அந்த ஒரு பதில் தான் கோட்டையில் யார் அமரப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும்!












Click it and Unblock the Notifications