24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த முறை லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் முதல்கட்டத்தில் நேற்றைய தினம் தமிழ்நாடு உள்ளிட்ட பல இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது.
தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது.
என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications