அதிமுக- பாஜக கூட்டணி முறிவுக்கு என்ன காரணம்.. மவுனம் கலைத்தார் எடப்பாடி பழனிசாமி! என்ன சொன்னார்
சென்னை: பாஜக- அதிமுக கூட்டணி முறிவு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
அதிமுக பாஜக கட்சிகள் கடந்த சில காலமாகவே கூட்டணியில் இணைந்து பயணித்து வந்தது. கடந்த லோக்சபா தேர்தலில் இந்தக் கூட்டணி உருவான நிலையில், இரு கட்சிகளும் இணைந்தே பயணித்து வந்தனர்.

இடையே சில மோதல்கள் வந்தாலும் இரு கட்சிகளும் இணைந்தே பயணித்து வந்தன. இந்தச் சூழலில் அண்ணா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையானது. இதற்கு அதிமுக தலைவர்கள் கடும் பதிலடி கொடுத்தனர்.
அதிமுக பாஜக கூட்டணி முறிவு: அதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நேரடியாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. கூட்டணி முறிவு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கிடையே பாஜக கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி மவுனம் கலைத்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணத்தை அவர் முதல்முறையாக விளக்கியுள்ளார். சேலம் மாநகரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்படி திருவாக்கவுடனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
எடப்பாடி பழனிசாமி: இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது பாஜக கூட்டணி முறிவு என்பது பொதுச்செயலாளர் முடிவு இல்லை என்றும் அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்பது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மாநிலத்தின் உரிமையைக் காக்க அதிமுக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைத்துப் போட்டியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகள் என்ன என்பதை அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகும் முடிவை எடுத்தோம்.
எனது முடிவு இல்லை: இது பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எடுத்த முடிவாகும். அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தையும் கூறவில்லை எனச் சிலர் கூறுகிறார்கள். ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகிறது என்றால், அது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். அதுதான் இறுதி முடிவு.
சில நேரங்களில் தேசிய கூட்டணியில் இருக்கும் போது, தேசியக் கட்சி எடுக்கும் முடிவுகளில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் நாம் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதை நிறைவேற்றுகின்ற கட்டாயம் ஏற்படுகிறது.. இனி அது போன்ற நிலைமை இல்லை.. ஏனென்றால் தமிழக மக்கள் தான் எஜமானர்கள்.. அவர்கள்தான் முதலாளிகள் அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வது தான் அதிமுகவின் எண்ணம்.. தமிழக மக்களின் உரிமைகளையும் மீட்டெடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications