“எப்படி வந்துச்சு?” அமைச்சர் எவ வேலு மீதான ஐடி ரெய்டுக்கு இதாங்க காரணம்.. அண்ணாமலை சொன்ன விஷயம்!
சென்னை: அமைச்சர் எ.வ.வேலு தற்போது சேர்த்து வைத்திருக்கும் சொத்துகள் எப்படி வந்தன? அதற்கு பணம் எங்கே இருந்து வந்தது? புகாரின் அடிப்படையிலேயே எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி ரெய்டில் சிக்கிய அமைச்சர்: அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்ற பிரிவுகளையும் அமைச்சர் எ.வ.வேலு கவனித்து வருகிறார். அதனால் அது சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இந்த சோதனை சுமார் 80 இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை தொடங்கிய இந்தச் சோதனை 8 மணி நேரம் தாண்டி தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்னதாக 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவும் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் நோக்கம்: கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது வருமான வரித்துறை. அதே போல கடந்த ஜூலை மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில் அவர் தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித் துறை சோதனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அது வழக்கமாக நடப்பதுதான். இப்போது காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகள் இருக்கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி என்று பல அணிகள் உள்ளன. அதுபோல பாஜகவின் ஒரு அணிதான் வருமான வரித் துறை. ஐடி, அமலாக்கத் துறை இவையெல்லாம் பாஜகவினுடைய அணிகள். அவர்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை சட்டப்படி சந்திப்போம்" என்றார்.

அண்ணாமலை பேட்டி: இந்நிலையில், இந்த ரெய்டு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "அமைச்சர் எ.வ.வேலு வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் எப்போதோ வந்திருக்க வேண்டியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், எ.வ.வேலுவின் மருத்துவக் கல்லூரியை திறந்து வைப்பதில் குறியாக உள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எ.வ.வேலு யார்? அவர் என்ன தொழில் செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், அவர் தற்போது சேர்த்து வைத்திருக்கும் சொத்துகள் எப்படி வந்தன? அதற்கு பணம் எங்கே இருந்து வந்தது? என்ற கேள்விகள் மக்களுக்கு இருக்கின்றன. திமுக அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை வைத்து வருமானத்துக்கு அதிகமாக பணம் பெற்று சொத்து சேர்த்து வருகிறார்கள். இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊழல் அதிகரித்து வருகிறது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications