’தாமரை’யின் பச்சைக் கொடி! கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ஓபிஎஸ்! மாஜிக்களை கொம்பு சீவி விடும் இபிஎஸ்!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலைமையிடம் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலகிச் செல்லும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு உற்சாகமடைந்திருக்கிறது. இதன் காரணமாக அதிமுக எடப்பாடி தரப்பு மாஜிக்கள் பாஜகவை மறைமுகமாக விமர்சித்து வரும் நிலையில் கூட்டணி மாறும் காட்சிகளும் அரங்கேறலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான மோதல் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. கட்சியின் அதிகாரம் மிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற போவது யார் என்ற போட்டியில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக இந்த அதிகார யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் எடப்பாடி ஓபிஎஸ் என இருவரது கையும் மாறி மாறி ஓங்கி வருகிறது. இறுதி யுத்தத்தில் பாஜக ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தரப்பே வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

அதிமுக மோதல்
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சற்று அதிருப்தி அடைந்துள்ளது. காரணம் ஏற்கனவே டெல்லியில் செல்வாக்கு பெற்ற ஓ.பன்னீர்செல்வம் தற்போதும் அதனை பலப்படுத்திக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லி சென்று தனது தரப்புக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அமித் ஷாவை சந்தித்த போதும் பிரதமர் நரேந்திர மோடி எடப்பாடி பழனிச்சாமி தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. தமிழக வருகையின் போது சென்னை விமான நிலையத்திலும் தற்போதைய திண்டுக்கல் வருகையின் போது மதுரை விமான நிலையத்திலும் வரவேற்பு மட்டுமே கொடுக்கப்பட்டது.

பாஜக ஆதரவு
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசியது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் பாஜக மீதான அதிருப்தியை முன்னாள் சீனியர் அமைச்சர்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறது எடப்பாடி தரப்பு. தற்போது பத்து நாடாளுமன்ற தொகுதிகள் கேட்பதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து பாஜக தலைமை தனக்கு எதிராக செயல்படுகிறதோ என நினைக்கிறார் எடப்பாடி. இதன் காரணமாகத்தான் செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்கள் பாஜக தரப்பை மறைமுகமாக விமர்சித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு?
இதனால் கடுப்பான பாஜக தரப்பு ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற்றிருக்கலாம் என சிவி சண்முகம் உள்ளிட்டோர் பேசிய நிலையில் தற்போது அதே பாணியை கையில் எடுக்க எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் இதனால் வரும் காலங்களில் பல சீனியர் மாஜிக்கள் பாஜக விமர்சனம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள் என கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது போன்ற பேச்சுக்கள் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

அணி தாவும் படலம்
மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு முக்கிய கட்சியுடன் அதிமுக அணிசேர இருப்பதாகவும் கூறப்படுகிறது அரசியலில் எதுவுமே மாறலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி நகர்வுகள் இருப்பதாகவும் பாஜகவை கழட்டிவிட்டால் சிறுபான்மை வாக்குகள் ஓரளவு கிடைக்கும் என்பதோடு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என கருதுவதாக கூறப்படுகிறது. வரும் காலங்களில் அதிரடி மாற்றங்களும் அணி தாவும் படலங்களும் இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications