"கல்லாப்பெட்டி சிங்காரம்!" நன்றிகெட்ட எடப்பாடி! நாட்டை விட்டே துரத்தணும்- எம்ஆர்கே.பன்னீர்செல்வம்
சென்னை: திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எம்ஆர்கே பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி நன்றி கெட்டவர் என்றும் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் சாடினார்.
திமுக பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். இவரது நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புனித தோமையர்மலை ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடவாக்கத்தில் நடைபெற்றது.

நூற்றாண்டு விழா
தலைமை பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய குழு உறுப்பினருமான மேடவாக்கம் ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேளாண்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்தரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், பொதுமக்கள் பலருக்கும் நலத்திட்ட உதவிகளையும் அவர்கள் அளித்தனர்.

சிங்கார சென்னை
இந்த நிகழ்ச்சியில் பேசிய வேளாண்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம், "சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வளர்ச்சியடைந்ததற்குக் காரணம் தமிழக முதல்வர் தான். அவர் சென்னை மேயராக இருந்தபோது சிங்கார சென்னையாக மாற்றுவேன் என்று சொன்னார். சும்மா சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. சொன்னது போலவே சென்னையைச் சிங்கார சென்னையாக மாற்றினார். இன்று சென்னை இந்தளவில் இருக்கக் காரணம் அவர் தான்" என்றார்.

கல்லாபெட்டி சிங்காரம்
தொடர்ந்து பேசிய அவர், கல்லாபெட்டி சிங்காரம் என எடப்பாடியை விமர்சித்தார்.. கொரோனா பரவிய போது அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று அதிமுக அரசுக்குத் தெரியவில்லை என்று விமர்சித்த அவர், அதிமுக முறையான நடவடிக்கை எடுக்கத் தவறியதால் கொரோனா காலத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்றும் சாடினார். மேலும், எடப்பாடி முதல்வராக இருந்தபோது கல்லாபெட்டியை நிரப்ப நெடுஞ்சாலைத் துறையையும் பொதுப்பணித் துறையையும் வைத்துக்கொண்டார் என்றும் விமர்சித்தார்.

கொள்ளை
தொடர்ந்து எடப்பாடியைச் சாடி பேசிய அவர், "கொரோனா காலத்தில் பொதுமக்கள் எந்தளவுக்குச் சிரமத்தில் இருந்தார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். அவர்களைக் காப்பாற்ற அதிமுக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை விட்டுவிட்டு ரூபாய் 20,000 கோடியை டெண்டர் விட்டு கல்லா கட்டியவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி. இதன் காரணமாகவே கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் இவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்
எடப்பாடி முன்பு எப்படி இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். சாதாரண அமைச்சராகவே இருந்தார். அப்படியிருந்த எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்து தான் முதல்வராகவே ஆனார். ஆனால், அதன் பிறகு, இதுவரை சசிகலாவைச் சந்திக்கக் கூட இல்லை. அவ்வளவு ஏன் சசிகலாவைக் கட்சியை விட்டும் நீக்கிவிட்டார். இப்படிப்பட்ட நன்றிகெட்ட துரோகிகளை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்" என்று அவர் கடுமையாகச் சாடி பேசினார்.












Click it and Unblock the Notifications