இனி பாஜகவை நம்ப முடியாது.. பிளான் பி ரெடி.. ஓபிஎஸ் திட்டம் என்ன? பண்ருட்டியார் பலே
ஓ பன்னீர்செல்வத்தை பாஜக முழுமையாக கைவிட்டதாகவும், இனி பாஜகவை நம்பக்கூடாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை: ஓ பன்னீர்செல்வத்தை பாஜக முழுமையாக கைவிட்டதாகவும், இனி பாஜகவை நம்பக்கூடாது என்றும், ஓ பன்னீர்செல்வத்தின் பிளான் பி திட்டம் குறித்து பண்ருட்டி ராமச்சத்திரன் கூறினார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பண்ருட்டி ராமசந்திரனிடம், அந்த நெறியாளர் இனி ஓபிஎஸ்க்கு என்ன வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், இதை இழப்பு என்று நான் கருதவில்லை. அரசியலில் மக்களின் தீர்ப்பு வேறாக இருக்கும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை என்று எங்களுக்கு வருத்தம் தான்.ஆகவே இப்போது உள்ள சூழ்நிலைக்கு சட்டப்போராட்டம் தொடர்கிறது. இது முடிவுக்கு வந்துவிட்டதாக கருதவில்லை.
சட்டப்போராட்டத்தை மட்டுமே ஓபிஎஸ் இதுவரை நம்பி இருக்கக்கூடும். இனி நாங்கள் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று போய்க்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. இந்த ஆறு மாதத்தில் நீதிமன்றத்திற்கு போனதைவிட மக்கள் மன்றத்திற்கு போயிருக்கலாம். நீதிமன்றத்தை அதீதமாக நம்பி இருந்தோம். அதனுடைய விளைவை அனுபவிக்கிறோம்.

முன்பே போயிருக்கலாம்
இப்போது மக்கள் மன்றத்திற்கு நாம் போகிற போது, காரண காரியத்துடன் போக வேண்டும். இவ்வளவு காலம் கட்சியில் இருந்த ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து தூக்கி எறியும் நிலை இருக்குமானால், அந்த கட்சியில் மற்ற உறுப்பினர்களுக்கு என்ன பாதுகாப்பு என்று கேள்வி எழுப்புவோம். நீதிமன்றத்தை மட்டுமே நம்பி இருந்த இந்த 6 மாத காலத்தில் மக்களை சந்தித்தும் பேசியிருக்கலாம்,. ஆனால் அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

அள்ளிவீசத் தெரியவில்லை
இளவு காத்த கிளி போல் இனி இருக்க மாட்டோம். பிளான் B-க்கு தயாராகவே உள்ளோம். எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கும் நிர்வாகிகளை எதிர்ப்பதுதான் மக்களிடம் செல்வாக்கை தரும் என்பது என் தனிப்பட்ட கருத்து என்றார். அப்போது குறிக்கிட்ட நெறியாளர், ஏன் ஓபிஎஸ் கூட அந்த நிர்வாகிகள் இல்லை என்று கேட்டார். அப்போது பண்ருட்டியார், அள்ளிவீசத் தெரியவில்லை ஓபிஎஸ்க்கு என்று சொல்வார்களே அப்படித்தான் நடந்திருக்கு என்றார். அதற்கு நெறியாளர் கூட இருப்பவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று சொல்லலாமா என்றார். அதற்கு பண்ருட்டியார்,

எடப்பாடிக்கு இல்லை
எம்ஜிஆர் வெளியேறியதை போல் கட்சியை விட்டு வெளியே வந்து நேர்மையாக அரசியல் செய்திருக்கிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ் கடந்த சில வருடங்களில் நம்பக்கூடாதவர்களை எல்லாம் நம்பினார். இந்த பட்டியலை சொன்னால் நேரம் போதாது. எடப்பாடி பழனிசாமி வரை பலரையும் நம்பினார். ஓ பன்னீர்செல்வம் மிகவும் பணிவாகவே நடந்து கொண்டார். அவருக்கு போராட்ட குணம் உள்ளது. ஆனால் எடப்பாடியின் போராட்ட குணம் என்பது சுத்தமாக இல்லை..

கிரீடம் எப்படி
எடப்பாடி பழனிச்சாமி தன்னை பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்.என்னை பெரிய மனுஷனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றா போராடுவார்கள்? என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா பிறந்த நாளைக்கு முதல் நாள் தீர்ப்பு வந்தது எடப்பாடிக்கு கிரீடம் சூட்டியதை சந்தேகித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அரசியல் விவகாரத்தில் இனி பாஜகவை நம்பக்கூடாது என்றும் தெரிவித்தார்.

எடப்பாடி வலுவாகிறார்
மேலும் அவர் கூறும் போது, 2024 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு. இனி ஓபிஎஸ் எப்படி வலுவாகி நமக்கு எப்படி பயன்படப்போகிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ் தன்னை நியாயவானாக காட்டினாரே தவிர பலவானாக காட்டவில்லை. ஆனால் இபிஎஸ் தன்னை பலவானாக காட்டுவதுடன், தன்னையே எம்ஜிஆர் ஆகவும் காட்ட முயற்சிக்கிறார். அதனால் இபிஎஸ்ஐ வைத்து தான் 2024 இல் நாம் தேர்தலை சந்திக்கனும், அவரை வலுப்படுத்துவதைத்தான் நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டும் அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்று பாஜக குறித்து நேரடியாகவே பண்ருட்டி ராமசந்திரன் பேசினார்.












Click it and Unblock the Notifications