விஜய் அரசியல்.. வந்து விழுந்த கேள்வி.. அவ்வளவு அவசரத்திலும் ரஜினி நின்னு சொன்ன பதிலை பாருங்க!
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரப் போகிறார் என்ற பேச்சு இருந்து கொண்டே தான் இருந்தது. இதன் காரணமாகவே கூட அவரது பல படங்கள் ரிலீஸ் சமயத்தில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது எனச் சொல்லலாம்.

குறிப்பாகத் தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகம் பல அரசியல்வாதிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகச் சொல்வார்கள். அதன் பிறகு கத்தி, சர்கார் என்று ஒவ்வொரு படத்திலும் சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும்.
விஜய்: அதேநேரம் அரசியலுக்கு வரும் எண்ணம் அவருக்கு இருக்கிறது என்பதையும் அவரது பேச்சில் தெரியும். அவரது செயல்பாடுகளும் அதை நோக்கியே இருந்தது. பணமதிப்பு நீக்கம் தொடங்கி ஜல்லிக்கட்டு வரை தனது கருத்தை வெளிப்படையாகச் சொன்னார். மேலும், தொகுதி வாரியாக அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்குவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் என்று பல விஷயங்களைச் செய்தார்.
இப்போது என இல்லை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் அரசியல் வருகை தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருப்பார்கள். அப்போதும் கூட அவர், தன்னை இந்த இடத்தில் அமர்த்திய மக்களுக்கு நிச்சயம் எதாவது செய்ய வேண்டும் என்றும் அதற்கான காலம் சரியாக வரும் என்பது போலவே கூறியிருப்பார்.
அரசியல் கட்சி தொடக்கம்: இப்போது தான் அதற்கான சரியான காலம் என்பதை விஜய் முடிவு செய்துவிட்டார் போல.. கடந்த வாரம் தான் அவர் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியை ஆரம்பித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அவர் கட்சியை ஆரம்பித்துள்ளார். விஜய் மக்கள் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கட்சியைப் பதிவு செய்ய டெல்லி சென்றிருந்தார். அதன்படி விஜய் தலைவராக இருக்கத் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார்.
ரஜினி: விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதற்கிடையே விஜய் அரசியல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளது தொடர்பாக இன்று சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அவரது இந்த பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் பொறுத்தவரை அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏற்கனவே கடந்த முறை நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். அப்போது தேர்தலில் கட்சி கொடியையும், விஜய் படத்தையும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே புதிதாகக் கட்சி ஆரம்பித்துள்ள விஜய், வரும் லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை என்றும் இதில் யாருக்கும் ஆதரவும் தரப்போவது இல்லை என அறிவித்துள்ளார். அதேநேரம் 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், திரைப்படங்களில் இருந்தும் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications