தமிழக அரசு vs ஆளுநர்.. உரசலின் உச்சம்! நீட் பிரச்சினையில் அடுத்து என்ன செய்ய முடியும் அரசு? விளக்கம்
சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சபாநாயகருக்கே, திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த விவகாரம் தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையேயான மோதலின் அடுத்த கட்ட பரிணாமமாக பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மறைமுகமாக ஆளுநர் மற்றும் அரசுக்கு நடுவே இருந்து வந்த உரசல் இன்று பூதாகரமாக வெடித்து கிளம்பி விட்டது என்று தெரிவிக்கிறார்கள் இந்த விஷயங்களை உற்று கவனித்து வரும், அரசியல் விமர்சகர்கள்.
தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது.

6 மாதங்களாக கிடப்பில் இருந்தது
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்ததால், இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மிகவும் பிரயத்தனப்பட்டார். ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் ஆளுநர் ரவி இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை. இந்த நிலையில்தான் ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று மக்களவை திமுக குழு தலைவர் டி ஆர் பாலு தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மனு அளித்திருந்தனர். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் லோக்சபாவில் கோஷங்கள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

முரசொலி நாளேட்டில் காட்டம்
இன்னொரு பக்கம் குடியரசு தினத்தையொட்டி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் தமிழக ஆளுநர் ரவி, நீட் தேர்வு ஏழை மாணவ மாணவிகளுக்கு மருத்துவக்கல்வி கனவை நனவாக்க உதவி செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார். குடியரசுத்தலைவர் வாழ்த்துரையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்ததற்கு திமுக தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்துதான் திமுக அதிகாரப் பூர்வ நாளேடு முரசொலியில், தமிழகம் நாகாலந்து கிடையாது என்றும் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்ற பெயரில் காட்டமான கட்டுரை வெளியிடப்பட்டது. இவ்வாறு இரு தரப்புக்கும் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் தான் இன்று நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி.

திமுக எதிர்ப்பு
அடுத்த கட்டமாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து இதை சரி செய்யலாம் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக ராஜ்யசபா எம்பி மற்றும் வழக்கறிஞரான வில்சன் கூறுகையில், ஆறு மாதங்களாக குடியரசுத் தலைவருக்கு இந்த மசோதாவை ஆளுநர் அனுப்பாமல் இருந்தது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல். நீட் தேர்வு எழுதுபவர்கள் கோச்சிங் கிளாஸ் சென்று பணத்தை கொட்டிக் கொடுத்து படிப்பவர்கள்தான். எனவேதான் ஏழை எளியவர்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். பணம் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என்ற பாகுபாட்டை நீட் தேர்வு உருவாக்கிவருகிறது. இந்த மசோதாவை மறுபடி தமிழக அரசு ஆளுநருக்கு திருப்பி அனுப்ப முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக அரசு என்ன செய்யலாம்?
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் இதுபற்றி கூறுகையில், அரசு சார்பில் அனுப்பப்படும் மசோதாவை கூடிய விரைவில் பரிசீலனை செய்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால் நீட்தேர்வு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் மிக பெரிய தாமதம் செய்து வருகிறார். இதையெல்லாம் பார்த்தால் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் சரியான புரிதல் இல்லை என்பது தெரிகிறது. ஆளுநர், நீட் மசோதாவை திருப்பி அனுப்பும்போது ஏன் இதை ஏற்கவில்லை என்ற விவரத்தை குறிப்பிடலாம். ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி வழங்கிய பரிந்துரை அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதை ஆளுநர் பரிசீலனை செய்து இருக்க வேண்டும். மாநில அரசு மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதை அவர் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. இவ்வாறு ஓய்வு பெற்ற நீதிபதி கற்பகவிநாயகம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications