+2வில் தோல்வியா? .. மேற்படிப்பு போறீங்களா?.. - இலவசமாக ‘ஐடியா’ தரும் தமிழ்நாடு அரசு…
சென்னை: கோடை விடுமுறையிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது பள்ளிக்கல்வித்துறை. அதுவும் +2 முடிவுகள் வந்த பிறகும்கூட இந்தத்துறை பரபரப்பாக வேலை பார்த்து வருகிறது.
12ஆம் வகுப்புக்கு அப்புறம் என்ன படிக்கலாம்? எந்தத் துறை சார்ந்து மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் எனக் குழப்பத்தில் உள்ள மாணவர்களுக்காக ஒரு வழிகாட்டும் குழு அமைத்து உதவி செய்து வருகிறது பள்ளிக்கல்வித்துறை.
மேலும் குடும்ப வறுமையால் தங்களின் பிள்ளைகளை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. +2 தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்த உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
இலவச ஆலோசனை பெற வேண்டுமா? : இது குறித்து மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் 14417 என்ற எண்ணில் இயங்கும் உதவி மையத்தை அழைக்கலாம். இதில் பள்ளிக்கல்வி சார்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். உங்களது சந்தேகங்கள் அனைத்திற்கும் வீட்டிலிருந்தபடியே ஒரு போன் கால் மூலம் பல விவரங்களைப் பெற தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளது.
இந்த உதவிக் குழு நீங்கள் +2 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்ணை வைத்து அதற்கான சரியான படிப்பைத் தேர்ந்தெடுக்க உதவும். மேலும் என்ன துறை சார்ந்து உங்களது விருப்பம் இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப வழிகாட்டவும் செய்யும். தனியார் ஆலோசனைகளிடம் இதைப் போன்ற உதவிகளுக்குச் சென்றால், ஆயிரக்கணக்கில் பணம் செலவு ஆகும்.
ஆனால், அரசு அதை இலவசமாகவே செய்து தந்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் தங்களின் அடுத்தகட்ட மேற்படிப்பைக் குழப்பமே இல்லாமல் தேர்வு செய்ய முடியும் என்பது உறுதி.
ஏதோ தேர்ச்சி பெற்ற மாணவர்களை மட்டுமே மனதில் வைத்து இந்த உதவி மையம் இயங்குவதாக யாரும் தவறாகக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் இந்த மையம் சரியான ஆலோசனையை வழங்குகிறது.

மறுதேர்வு எழுதக் காத்திருக்க வேண்டாம்: தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த கல்வி ஆண்டுவரை மறுதேர்வு எழுதக் காத்திருக்க வேண்டாம். உடனடியாக துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் தகுந்த ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஒருவேளை வேறு சில காரணங்களால் இந்த ஆண்டு +2 தேர்வை எழுத முடியாத மாணவர்களும் உடனடியாக துணைத்தேர்வு எழுதி, இதே கல்வி ஆண்டில் கல்லூரிக்குச் சென்று படிக்கவும் வழிவகை செய்து தரப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுவது தொடர்பாகப் பயம் இருந்தால், அவர்கள் வழிகாட்டி குழுவைச் சந்தித்து உத்வேகம் தரும் கருத்துகளைப் பெறலாம். குழுவில் உள்ள உறுப்பினர்கள் பல வழிகளில் உங்கள் மனதில் தேர்வு குறித்த அச்சத்தை அகற்றி, நம்பிக்கையோடு தேர்வை வெல்வதற்கான சூத்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
நீங்கள் ஆலோசனை பெற விரும்பினால் 14416 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

துணைத்தேர்வு எழுத யாரை அணுக வேண்டும்? : +2 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வை மீண்டும் எழுத உங்களது பள்ளிக்கு நேரில் செல்ல வேண்டும். அதாவது 11.5.2023 முதல் 17.5.2023க்குள் சென்று காலை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக அனைத்து கல்வி மாவட்டங்களிலும் உள்ள மையங்களில் (Government examination service centre) ஆலோசனை பெறலாம். இணையத்தில் விண்ணப்பம் பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் அது குறித்த விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
துணைத்தேர்வு எழுதி கல்லூரிக்குச் செல்ல முடியுமா? என யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அதை உடனடியாக கைவிட்டுவிடுங்கள். கட்டாயம் படிக்கலாம். அதுவும் விரும்பிய பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இதில் எந்தத் தடைகளும் இருக்காது என மிகத் தெளிவாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

+2வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் ஜூன் 19 அன்று முதல் மறுதேர்வுகள் நடைபெற உள்ளன.
நடிகை ரோகிணி பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாட்டை அதிக பாராட்டி இருக்கிறார். அவர், "12ஆம் தேர்வு முடிந்துவிட்டது. அதற்கான முடிவும் வந்துவிட்டது. உயர்கல்வியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் எடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக வழிகாட்டிக் குழு ஒன்றைப் பள்ளிக்கல்வி நிர்வாகம் அமைத்துள்ளது. அதை மாணவர்களாகிய நீங்கள் பயன்கொள்ள வேண்டும். அதேபோல பெண்கள் உயர்கல்வி படிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 'புதுமைப் பெண்' திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார். அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.
ஆகவே அதைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் படிக்க வேண்டும். ஆண், பெண் என்ற சமத்துவத்தை எப்படி நாம் எட்ட முடியும்? நிச்சயம் கல்வி என்ற ஒரு விஷயத்தை வைத்துத்தான் நாம் எட்ட முடியும்" என்கிறார்

மறுகூட்டல் விண்ணப்பம் பெறுவது எப்படி? : அடுத்ததாக இன்னொரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வேண்டும். +2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 13 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதுவே கடைசி நாள்.
விடைத்தாள் நகல் பெற 275 ரூபாயும் மறுகூட்டல் செய்ய 205 ரூபாயும் கட்டணம் செலுத்தவேண்டும் இதில் உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாய் கட்ட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆக மொத்தமாகத் தேர்ச்சி விகிதமானது 94.03% ஆக உள்ளது.
தேர்வு எத்தியவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 8,03,385 ஆகும். இதில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 4,398 மாணவர்களில் 3,923 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications