சோழ மண்டல தளபதி.. சத்தத்தை கேட்டதும் வந்ததே கோபம்! கை ஓங்கிய வைத்தியலிங்கம்! அதன்பின் நடந்த ட்விஸ்ட்
சென்னை: அதிமுக நிர்வாகி ஒருவரை அடிப்பது போல ஆர். வைத்தியலிங்கம் கையை ஓங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு நாளை நடக்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக கடந்த 10 நாட்களாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பொதுக்குழுவை காண 3000 நபர்கள் வரை அமர்ந்து நேரடியாக காண்பதற்கு பிரத்யேக செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பொதுக்குழு மூலம் கண்டிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஆக முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். ஆனால் நாளை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு நம்புகிறது.

வைத்தியலிங்கம்
இந்த அதிமுக மோதலில் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்திற்கு துணையாக ஆர். வைத்தியலிங்கம் இருந்து வருகிறார். ஆர் வைத்தியலிங்கம் மட்டுமே ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தற்போது உறுதியாக நிற்கும் சீனியர் நிர்வாகி ஆவார். மற்ற பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தாவி விட்டனர். இந்த நிலையில் வைத்தியலிங்கம் இன்று ஓ பன்னீர்செல்வத்தை அவரின் வீட்டில் சந்தித்தார்.

சந்திப்பு
தீர்ப்பு மட்டும் சாதகமாக வரவில்லை என்றால் என்ன செய்வது என்று ஆலோசிக்க நிர்வாகிகள் இன்று காலை ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளனர். மனோஜ் பாண்டியன், ஆர்பிசி பிரபாகர், வைத்தியலிங்கம் ஆகியோர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று ஆலோசனை செய்தனர். நாளை தீர்ப்பு எதிராக வந்தால் என்ன செய்வது., அடுத்த கட்ட சட்ட போராட்டங்களை எப்படி மேற்கொள்வது என்று ஆலோசனை செய்தனர்.

பேட்டி
இதையடுத்து வெளியே வந்து பேட்டி அளித்த வைத்தியலிங்கம், நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். தீர்ப்பை கண்டிப்பாக மதிப்போம். அதைதான் எதிர்பார்க்கிறோம். தீர்ப்பு வரட்டும் பிற விஷயங்களை பார்க்கலாம். ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர். எதிர்காலத்திலும் அவர் தான் ஒருங்கிணைப்பாளர். இதை மாற்ற முடியாது, என்று வைத்தியலிங்கம் குறிப்பிட்டார்.

கூச்சல்
இதையடுத்து வைத்தியலிங்கம் பேசிக்கொண்டு இருக்கும் போதே சோழ மண்டல தளபதி அண்ணன் ஆர்வி என வைத்தியலிங்கத்திற்கு ஆதரவாக நிர்வாகி ஒருவர் கோஷம் போட்டார். அவர் தொடர்ந்து அண்ணன் வாழ்க வாழ்க என்று கோஷம் போட்டார். இதனால் கோபம் அடைந்த வைத்தியலிங்கம் குரல் கொடுத்த கட்சி நிர்வாகியை உரிமையுடன் அதட்டினார். ஆனால் இதை கவனிக்காமல் அந்த நபர் தொடர்ந்து கோஷம் போட்டார்.

வைத்தியலிங்கம்
இதனால் கோபம் அடைந்த வைத்தியலிங்கம் , அவரை அடிப்பது போல கையை ஓங்கி பின்னர் அமைதிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் காரில் ஏறும் போது தான் திட்டிய நிர்வாகியை அழைத்து தனியாக பேசினார். தன் பெயரை அப்படியெல்லாம் வாழ்க வாழ்க என்று சொல்லக்கூடாது.. எனக்கு அது தேவையில்லை என்று அறிவுரை கூறி.. பின்னர் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications