“ஸ்டாலின் செல்ஃபி எடுக்க நானே காரணம்..” மாடர்ன் தியேட்டர் சர்ச்சையில் நடந்தது இதுதான்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் எடுத்த ஒரே ஒரு செல்ஃபியை பலர் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்கிறார் மூத்த தயாரிப்பாளர் 'முக்தா' சீனிவாசனின் மகன் முக்தா ரவி.
மேலும் அவர், கலைஞர் சிலையை மாடர்ன் தியேட்டர் ஆர்ச் பக்கத்தில் வைக்கவேண்டும் என்ற கோரிக்கைவைத்ததே நாங்கள்தான். அது முதல்வர் ஸ்டாலினின் திட்டம் இல்லை.

தமிழ் சினிமாவின் ஒரு பாரம்பரிய சின்னம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக முயற்சி எடுத்தோம். அதற்கு முதல்வர் உதவ முன்வந்தார். அதனால் அவருக்குக் கெட்ட பெயர் கிடைத்ததுதான் மிச்சம் என்கிறார்.
தமிழ்சினிமாவின் மாபெரும் அடையாளம் சேலம் மாடர்ன் தியேட்டர். அதை1935 இல் நிறுவினர் திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் முதலியார். அதாவது டி.ஆர்.சுந்தரம். இந்த நிறுவனம் சதி அகல்யா தொடங்கி 'மந்திரி குமாரி' எனக் குறைந்த காலத்திற்கு உள்ளாகவே 100 படங்களுக்கு மேல் தயாரித்து சாதனைப் படைத்தது.
தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தைத் தயாரித்த பெருமை இந்த நிறுவனத்தையே சேரும். அண்ணாதுரை, மு.கருணாநிதி, கண்ணதாசன் எனப் பல திரை உலக ஆளுமைகளைத் தமிழ் சினிமாவுக்கு தந்த நிறுவனம் இது.
அதைப்போல் அலெக்சாண்டர் டுமாசின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட 'உத்தம புத்திரன்' படம்தான் முதன்முதலாக டபுள் ஆக்ட் பாணி சினிமாவை அறிமுகம் செய்துவைத்தது என்கிறார் பிரபல யூடியூப் பேச்சாளர் டாக்டர் காந்தராஜ்.

இதைப் போலவே இந்திய சினிமா வரலாற்றில் இண்டர்நேஷனல் விருதை முதன்முதலாகப் பெற்றது மாடர்ன் தியேட்டர் நிறுவனம்தான் என்றும் ஜெ.ஜி.விஜயம் என்ற அந்தப் படத்தின் கேமிராமேனுக்கு ஹாலிவுட் கேமிராமேன் அசோசேஷன் கொடுத்த விருதைப் பெற்றவர் என்ற உண்மை பலரும் அறியாதது என்றும் அவர் சொல்கிறார்.
சரி, முதல்வர் ஸ்டாலின் செல்ஃபி விசயத்திற்கு வருவோம். அந்த சர்ச்சையின் பின்னர் நடந்தது என்ன? உண்மை விளக்குகிறார் முக்தா ரவி.
"1950இல் 'மாடர்ன் தியேட்டர் 'மந்திரி குமாரி'யை எடுத்தார்கள். அதில் என் அப்பா முக்தா சீனிவாசன் பணியாற்றினார். அந்தப் படத்திற்குக் கலைஞர் கருணாநிதிதான் கதைவசனம் எழுதினார் என்பது உலகத்திற்கே தெரியும்.

கலைஞர் கருணாநிதியும் எனது அப்பா எனப் பலரும் ஸ்ரீரங்கபாளையத்தில் ஒரே அறையில்தான் தங்கி இருந்தார்கள். அந்த அறையில் ஒரு மின் விசிறிகூட கிடையாது. உடுத்துவதற்குக்கூட இரண்டு வேஷ்டி 2 சட்டை அளவில்தான் அவரிடம் இருந்தது.
அந்தளவுக்கு எளிமையாக வாழ்ந்துவந்தார் கலைஞர் கருணாநிதி. அதைச் சொல்வதற்காகத்தான் இந்தத் தகவலை இங்கே குறிப்பிடுகிறேன். அன்றைக்குப் பேனா என்பது அனைவரிடமும் இருக்காது. அன்று ஒருவர் பேனா வைத்திருப்பது, இன்றைக்கு ஒருவர் செல்போன் வைத்திருப்பதற்குச் சமம். அந்தளவுக்கு விலை உயர்ந்த விசயமாகப் பேனா இருந்தது.
குயில் இறகின் நுனியில் பேனாவின் நிப்பை பொருத்து இங்க் தொட்டுத் தொட்டு எழுதுவார்கள். சிலநேரங்களில் அந்த நிப், இங்க் பாட்டிலில் உள்ளே விடும்போது உள்ளேயே விழுந்துவிடும்.

அதைப்போல் ஊருக்குத் தகவல் சொல்லவேண்டும் என்றால் போஸ்ட் கார்டு வசதி மட்டும்தான். போன் எல்லாம் பெரிய பணக்காரர்கள் வீட்டில் எங்கோ ஒன்றுதான் இருக்கும்.
அன்றைய காலத்தில் இதுதான் நிலை. அப்படியான ஒரு காலத்தில்தான் 'மந்திரி குமாரி'க்கு படத்திற்குக் கிட்டத்தட்ட 100 பக்கங்கள் வரை கைப்பட்ட கலைஞர் கதைவசனம் எழுதினார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம். படத்தின் இயக்குநர் எல்லிஸ் ஆர் டங்கன்.
ஆனால், அவர் எடுத்த படக்காட்சிகளில் டி.ஆர்.சுந்தரத்திற்கு உடன்பாடு இல்லை. ஆகவே மீண்டும் பழைய காட்சிகளை ரீ ஷூட் செய்ய முடிவு செய்தார். அதனால் மீண்டும் சில காட்சிகளுக்கான வசனங்களைக் கலைஞரை எழுத வைத்தார்.

இன்றைக்கு 50 ஆண்டுகள் கடந்த பிறகும் அந்தப் படம் பேசப்படுகிறது என்றால் அதற்கு யார் காரணம்? மு.கருணாநிதிதான். அந்தளவுக்கு மாடர்ன் தியேட்டருக்காக உழைத்தவர் கலைஞர்.
ஆகவே ஒரு மகனாகச் சென்று அப்பா வேலை செய்த ஒரு நிறுவனத்தின் அடையாளமாக நிற்கும் மாடர்ன் தியேட்டர் ஆர்ச் முன் நின்று மு.க.ஸ்டாலின் செல்ஃபி எடுத்தார். அவர் முதல்வராக நின்று எடுக்கவில்லை. ஒரு மகனாகவே விரும்பி எடுத்தார். இதில் ஏதாவது தவறு இருக்கிறதா?
அதைப்போய் கேவலப்படுத்தலாமா? ஒருவரின் உணர்வை நீங்கள் கேவலப்படுத்தலாமா?

மாடர்ன் தியேட்டருக்கு சேலத்தில் நடிகர், நடிகைகள் ரிகர்சல் செய்வதற்காக ஒரு அரங்கம் இருந்தது. அதற்குள்ளாகவே ரெக்கார்டிங் ஸ்டியோ, எடிட்டிங் ஸ்டுடியோ என்று தனித்தனியாக இருந்தன.
இது மட்டுமல்லாமல் ஏற்காடு மலை அடிவாரத்தில் சண்டைக்காட்சிகள் படிப்பு செய்வதற்காக அங்கே ஒரு ஸ்டியோ இருந்தது. அன்றைய காலத்தில் இதுதான் மிகப் பெரிய சினிமா ஸ்டியோ.
அவர்தான் படப்பிடிப்பின் போது அனைவருக்கும் சாப்பாடு போடும் பழக்கத்தைக் கொண்டுவந்தார். அந்தக் காலத்தில் அரிசி பஞ்சம் நாட்டில் தலைவிரித்து ஆடியது. அந்தக் காலத்தில் அவர் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக, அவரது ஊழியர்கள் அனைவருக்கும் சாப்பாடு போட்டார்.

அதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டுதான் பின்னாளில் பலரும் படப்பிடிப்பின் போது சாப்பாடு போட ஆரம்பித்தார்கள். டி.ஆர். சுந்தரம் ஒரு வெளிநாட்டுப் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார்.
அவருக்கு 3 மகன்கள். சுந்தரம் 1963இல் இறந்துவிட்டார். அவருக்குப் பின் அவரது மனைவி அமெரிக்காவுக்குப் போய்விட்டார். அவருடன் இரண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவர் சென்றுவிட்டார்.
தமிழ்நாட்டில் அவரது மகன் ராமசுந்தரம் ஒருவர் மட்டும்தான் வாழ்ந்துவந்தார். அவர் 78வரைப் பல படங்களைத் தயாரித்து வந்தார். ஜெய்சங்கர் உருவாவதற்கு அவர்தான் முக்கிய காரணம்.
அவர் இறந்த பிறகு அவரது மனைவி கலைவாணி சுந்தரம் தான் ஸ்டியோவை நிர்வகித்துவந்தார். அவரது வாரிசுகள் அனைவரும் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டனர்.
ஆகவே அவர் மாடர்ன் தியேட்டர் இடத்தை முதியோர் இல்லத்திற்காகக் கொடுத்தார். ஏதோ சில காரணங்களால் அந்த இல்லம் சரியாக நடக்கவில்லை. அந்த இடத்தை முதியோர் இல்லத்திற்காக வாங்கியவர், மாடர்ன் தியேட்டர் நுழைவாயிலை அப்படியே இடிக்காமல் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
அதன்பிறகு அவர் ஒரு கட்டத்திற்குப் பின் வேறு நபரிடம் விற்றார். அவர் வேறு ஒருவருக்கு விற்றார். இப்படி மூன்று கை மாறியது. அவர்கள்தான் இந்த இடத்தில் வீட்டு மனைகள் போட்டு விற்றார்கள்.

இந்தநேரத்தில் தான் டி.ஆர்.சுந்தரம் சிலையை வைக்கச் சிலர் அந்த இடத்தை 'வர்மா' பில்டர் உரிமையாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதைத் தர மறுத்திருக்கிறார்கள்.
எங்களுக்கு அந்தப் பாரம்பரிய சின்னமான ஆர்ச் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எண்ணம் எழுந்தது. அதற்காக நாங்கள் தான் முயற்சி எடுத்தோம்.
அதனால் டி.ஆர்.சுந்தரம் உறவினரை அழைத்துக்கொண்டு போய் பூச்சி முருகனைச் சந்தித்தோம். அவரிடம் முதல்வர் ஸ்டாலினின் பார்வைக்கு எங்கள் கோரிக்கையைக் கொண்டுபோக வலியுறுத்தினோம்.

ஏதோ ஒருவகையில் ஸ்டாலின் அங்கே போய் செல்ஃபி எடுப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருந்துவிட்டேன். அவருக்கு ஏற்பட்ட கெட்ட பெயருக்கும் காரணமாக இருந்துவிட்டேன். அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
நான் நல்லது செய்ய நினைத்தேன். நான் தான் டி.ஆர்.சுந்தரம் சிலையை அங்கே வைக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் கலைஞர் சிலையை வைக்க வேண்டும் என்று பூச்சி முருகனிடம் சொன்னேன். திமுகவினருக்கு அந்த யோசனை இருந்ததா என எனக்குத் தெரியாது. நான் தான் முதன்முதலாகச் சொன்னேன்.
அந்த மாடர்ன் தியேட்டர் ஆர்ச் உள்ள இடம் 100 ஸ்கெயர் ஃபீட் தான் இருக்கும். அந்த இடத்தை அபகரித்து ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்? சொல்லுங்கள். வதந்தி பரப்ப ஒரு நியாயம் வேண்டாமா?

அந்தப் பில்டர் நிரந்தரமாக அங்கே இருக்கப் போகிறாரா? அவர் விற்கத்தானே போகிறார்? அவர் விற்ற பிறகு அந்தக் குடியிருப்பு வாசிகள் அதை இடிக்க முடிவு செய்தால் இவரால் தடுக்க முடியுமா? ஒரு பாரம்பரிய சின்னம் காப்பாற்றப்பட வேண்டும் என நாங்கள் விரும்பினோம். முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதற்காக அவர் மீது வதந்தி பரப்புவீர்களா? என்ன நியாயம் சார் இது?" என்கிறார்












Click it and Unblock the Notifications