பன்னீரு புள்ளிய வெக்க.. சசிகலா கோலத்தை போட.. "அவர்" வேற இங்கே வர.. அப்ப எடப்பாடி? அனலடிக்குதே அதிமுக
சென்னை: எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டுமானால், ஓபிஎஸ் அணியும், அமமுகவும் இணைய வேண்டும் என்று இருதரப்பிலும் கோரிக்கை வலுத்துள்ளது, தமிழக அரசியலின் கவனத்தை திருப்பி வருகிறது... இதையடுத்து, சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸின் சந்திப்பு எப்போது நடக்கும் என்ற ஆர்வமும் கிளம்பி வருகிறது.
இரட்டை தலைமை விவகாரம், சட்டசபைவரை வந்துவிட்டது.. நேற்று முன்தினம், எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் 2 பேருமே அருகருகே அமர்ந்திருந்த நிலையில், இரு தரப்பிலுமே வார்த்தைகளால் மோதிக் கொண்டனர்.
எடப்பாடி தரப்பினரை மூத்த தலைவர் முனுசாமியும், மனோஜ் பாண்டியனை ஓபிஎஸ்ஸூம் சமாதானம் செய்தனர்.. இந்த தலைவர்கள் சமாதானம் செய்யாவிட்டால், பேரவையில் அன்றைய தினம் கை கலப்பு நடந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

எம்ஜிஆர்
இந்தநிகழ்வு குறித்து, நேற்றைய தினம் சசிகலா செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டியை தந்திருந்தார்.. அதில், சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரும்போது அதில் ஒவ்வொருவரும் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் சார்ந்த பிரச்னை என்பதால் ஓபிஎஸ் பேசியதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவில் உள்ள 2 அணிகளையும் நான் தலைமையேற்க வாய்ப்புள்ளது. அதிமுக என்ற இயக்கம் எம்ஜிஆர் போட்ட விதை. அதை வளர்த்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழி வந்த நாங்கள் கட்சியை சிதற விடாமல் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பெறுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சசிகலா
கடந்த ஒரு வருட காலமாகவே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், சசிகலாவும், ஓபிஎஸ் மீதான அனுதாப அலையை வீசி வருகிறார்கள்.. சமீபத்தில் இடைத்தேர்தல் ரிசல்ட் வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "சசிகலாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் என்றும், சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளேன் என்றும் கூறியிருந்தார். எனவே, இந்த சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது... அதற்கேற்றபடி, பல தடவை சசிகலாவிடம் ஓபிஎஸ் தொடர்பு கொண்டாராம்.. அதற்கு சசிகலாவும் "விரைவில் சந்திக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாரே அதற்கு இதுவரை நேரம் ஒதுக்கி கொடுக்கவே இல்லை என்கிறார்கள்..

டைம் வந்தாச்சு
இதற்கு காரணம், ஓபிஎஸ்ஸை எப்போது கூப்பிட்டாலும், தன் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக வந்துவிடுவார் என்ற அதீத நம்பிக்கைதானாம்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸை சந்திக்கும்போது, தமிழக அரசியல் களத்தில் புதிய சலசலப்பையும், புதிய உத்வேகத்தையும் உருவாக்க வேண்டும் என்று சசிகலா நினைக்கிறாராம்.. அதனால்தான் சந்திப்பு தள்ளிப்போவதாக சொல்கிறார்கள்.. ஆனால் 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், "அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த தன்னை நீக்கியது செல்லாது என்று சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால்தான், ஓபிஎஸ் - சசிகலா அரசியல் ரீதியான சந்திப்பு இன்னும் நடைபெறவில்லை" என்று காரணம் கூறியிருந்தார்.. இப்படி ஒரு சடுகுடு ஆட்டம் நடந்துவரும்நிலையில், ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் 3 பேரின் சந்திப்புகளும் எப்போது நடக்கும் என்ற ஆர்வத்தையும் அவரவர் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது..

படுகுழிகள்
இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டுமானால், ஓபிஎஸ் அணியும், அமமுகவும் இணைய வேண்டும் என்று இருதரப்பிலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. இதற்கு காரணம், இடைத்தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்த பிறகு, அதிமுகவுக்குள் அதிருப்திகள் தலைதூக்கியதுதானாம். அதனால்தான், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 8 தோல்விகளை தந்து அதிமுகவை படுகுழியில் தள்ளிவிட்டார் என்று ஓபிஎஸ்ஸூம், தினகரனும் மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர்.. கட்சி ஒன்றுசேர்ந்தால் மட்டுமே, பலம்பொருந்திய திமுகவை எதிர்க்க முடியும் என்ற முடிவுக்கும் இரு தரப்பு நிர்வாகிகளும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

பச்சைக்கொடி
அதனால்தான், எடப்பாடிக்கு எதிராக நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான், இப்போதைக்கிருக்கும் ஆதரவாளர்களை தக்க வைக்கவும், சமூகரீதியான வாக்கு வங்கியை காப்பாற்றவும், சசிகலா, டிடிவியுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.. இதற்கு ஓபிஎஸ்ஸூம் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.. இதனால் ஓபிஎஸ் அணி, அமமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக, சமீபத்தில் தேனியில் நடந்த ஒரு போராட்டத்தில் அமமுக, ஓபிஎஸ் அணியினர் இணைந்து கலந்து கொண்டுள்ளனர்.. இந்த நிகழ்வு தொடர்பாக பெரியகுளம் தென்கரை பகுதியில் வைக்கப்பட்ட ஒரு போஸ்டர் பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.

சைலண்ட் கூட்டணி
ஓபிஎஸ் ஆதரவாளரும், தேனி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான முத்து என்பவர் இந்த பேனரை வைத்திருக்கிறார்.. அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா + ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் ஆகியோர் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன.. அத்துடன், "ஒற்றுமையே வலிமை, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, கழக தொண்டர்களே வாருங்கள் ஒன்றிணைவோம்" என்ற வாசகங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. இது ஓபிஎஸ் அணி, அமமுக தொண்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இதேபோல் ஒற்றுைமையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போஸ்டர் அடிக்க இருதரப்பு நிர்வாகிகளும் திட்டமிட்டுள்ளனராம்.. ஆக, ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் தரப்பிலான "சைலண்ட் கூட்டணி" மெல்ல மெல்ல வலுப்பெற்று வருவதாக சொல்கிறார்கள்..!!











Click it and Unblock the Notifications