"பச்சைக்கொடி".. அவங்க 2 பேரும் சேரப்போறாங்களாமே.. "சூழ்கிறது மேகங்கள்".. எடப்பாடி பழனிசாமி ப்ளான்?
சென்னை: எடப்பாடி பழனிசாமி டாப் கியரை போட்டு மேலே சென்றுகொண்டிருக்க, திடீரென சசிகலாவின் அரசியலும் வேகம் எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.. இதற்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டுமானால், ஓபிஎஸ் அணியும், அமமுகவும் இணைய வேண்டும் என்று இருதரப்பிலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன..
இதற்கு காரணம், இடைத்தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்த பிறகு, அதிமுகவுக்குள் அதிருப்திகள் தலைதூக்கியதுதானாம்.. கடந்த ஒரு வருட காலமாகவே, டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் ஓபிஎஸ்ஸுடன் மறைமுக ஆதரவு இருந்தாலும், இந்த இடைத்தேர்தலுக்கு பிறகு, இந்த ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள்.

படுகுழி
அதனால்தான், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 8 தோல்விகளை தந்து அதிமுகவை படுகுழியில் தள்ளிவிட்டார் என்று ஓபிஎஸ்ஸூம், தினகரனும் மாறி, மாறி விமர்சிக்க துவங்கியுள்ளனர். எனவே, கட்சி ஒன்றுசேர்ந்தால் மட்டுமே, பலம்பொருந்திய திமுகவை எதிர்க்க முடியும் என்ற முடிவுக்கும் இரு தரப்பு நிர்வாகிகளும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது. அதனால்தான், எடப்பாடிக்கு எதிராக நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான், இப்போதைக்கு இருக்கும் ஆதரவாளர்களை தக்க வைக்கவும், சமூகரீதியான வாக்கு வங்கியை காப்பாற்றவும், சசிகலா, டிடிவியுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைகள் தென்மண்டலத்தில் வலுவாக எழுந்துள்ளது.

பச்சைக்கொடி
இதற்கு ஓபிஎஸ்ஸூம் பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில், ஓபிஎஸ் அணி, அமமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக, சமீபத்தில் தேனியில் நடந்த ஒரு போராட்டத்தில் அமமுக, ஓபிஎஸ் அணியினர் இணைந்து கலந்து கொண்டுள்ளனர்.. முன்னதாக, "சசிகலாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் என்றும், சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளேன் என்று ஓபிஎஸ்ஸும் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளும் உலாவருகின்றன.. இதனிடையே, சசிகலாவின் அடுத்த பிளான் என்ன என்பது குறித்து செய்திகள் கசிந்து வருகின்றன..

ஸ்பீடு சசி
2 நாட்களுக்கு முன்பு சசிகலா ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், "அதிமுகவின் 2 அணிகளையும் ஒருங்கிணைத்து அதற்கு நிச்சயம் தலைமை ஏற்பேன் என்று கூறியிருந்தார். அதாவது, எடப்பாடி + - ஓபிஎஸ்ஸே மோதலே இன்னமும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், சசிகலாவின் இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முன்னமே தான் தொடுத்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்" என்று, இப்போது சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்..

ஜஸ்ட் 40,000
இதற்கு காரணம், சட்டமன்ற தேர்தலில் சத்தம் காட்டாமல் ஒதுங்கி இருந்த சசிகலா, எம்பி தேர்தலில் தனது செல்வாக்கை காட்ட நினைக்கிறாராம்.. அதற்காகவே அவர் இந்த வழக்கை தூசுதட்டுகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. அதுமட்டுமல்ல, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட்டை மட்டும் தக்க வைத்த நிலையில், வெறும் 40 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றிருந்தது.. "நமக்கு இந்த ஓட்டுக்கள் கிடைத்ததே பெரிய விஷயம்" என்று எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய நிர்வாகிகளிடம் பூரித்து சொன்னதாக செய்திகளும் கசிந்த நிலையில், பல சீனியர்கள் உண்மையிலேயே இந்த தோல்வியால் அதிர்ந்து போயுள்ளார்களாம்..

காக்க காக்க
அதிமுகவின் கோட்டையான கொங்குவிலேயே மண்ணை கவ்வியுள்ள நிலையில், பலம்பொருந்திய திமுகவை எப்படி வீழ்த்த முடியும்? என்ற கவலையும் சேர்ந்து கொண்டுள்ளதாம். அதனால், சில முன்னாள் அமைச்சர்கள், சசிகலாவுக்கு போனை போட்டு பேசினார்களாம்.. நிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது, கட்சி ஒன்றிணைந்தால்தான் திமுகவை சாய்க்க முடியும் என்று வருத்தப்பட்டார்களாம். அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்ட சசிகலா, "கொஞ்சம் பொறுமை" காக்க சொல்லி இருக்கிறாராம்.. அதனால்தான், கோர்ட்டையும் தாண்டி, அரசியல் ரீதியாகவும் பல காய்களை நகர்த்தி வருவதாக சொல்கிறார்கள்.. இதை மையமாக வைத்துதான், "2 அணிகளை ஒருங்கிணைத்து அதற்கு தலைமை ஏற்பேன்" என்று 2 நாட்களுக்கு முன்பு சசிகலா செய்தியாளர்களிடம் சொன்னாராம்..

2+ இன்னிங்ஸ்
இதன் அடுத்தக்கட்டமாக, சசிகலா எடப்பாடி பழனிசாமி அணியுடன் "பேச்சை" துவங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. தற்போது, கட்சியில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் மாஜிக்களை உருவாக்கியவரே சசிகலாதான் என்பதால், அவர் எடுக்க போகும் முடிவில் பலரும் ஒத்துழைப்பு தர நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.. எனினும், சிறையில் இருந்து வெளிவந்ததில் இருந்தே, சசிகலாவின் வியூகங்கள் எதுவுமே எடுபடாமல் போய்விட்டது.. நிர்வாகிகளுடன் பேசி ஆடியோக்களை வெளியிட்டது முதல் ஆன்மீக அரசியல் பயணம் வரை எதுவுமே சசிகலாவுக்கு கைகொடுக்கவில்லை.. எடப்பாடியின் விஸ்வரூப வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்ட நிலையில், தற்போது சசிகலாவின் அடுத்தக்கட்ட அரசியல் இன்னிங்ஸ் எந்த அளவுக்கு கை கொடுக்க போகிறதோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications