"ரூ.7000.." பாய ரெடியாக இருக்கும் தங்கம்! எப்போ உயரும்! நாலே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் விளக்கம்
சென்னை: தங்கம் விலை சில காலமாகவே கணிசமாகக் குறைந்து வரும் நிலையில், அது எப்போது அதிகரிக்கத் தொடங்கும் என்பது குறித்த தகவல்களைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளார்.
பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனை தமிழில் கிட்டதட்ட அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அவரது சேமிப்பு குறித்த டிப்ஸ் எப்போதும் டிரெண்டிங். இவர் எதையும் புதிதாகச் சொல்வதில்லை.
செலவைக் குறைத்து, கடன் வாங்காமல், தெரிந்த விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையே அனைவருக்கும் புரியும்படி எளிதாகச் சொல்கிறார். இதற்கிடையே அவர் தங்க விலை குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தங்கம்: தங்கம் என்பது அனைவருக்கும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்கம் தான் முக்கிய சேமிப்பாக இருக்கிறது. பங்குச் சந்தை, கடன் பத்திரம் குறித்தெல்லாம் எதுவுமே தெரியாத ஏழை தாய்மார்களும் கூட எப்படியாவது சீட்டு போட்டாவது தங்கத்தை வாங்கிவிடுவார்கள். தங்கம் என்பது சிறந்த முதலீடு என்று இவர்கள் கருதுவதே இதற்குக் காரணம். இப்படியே சிறுக சிறுக தங்கத்தைச் சேமித்து விடுவார்கள்.
ஆபத்தான காலங்களில் நமக்கு மிகப் பெரியளவில் உதவுவது தங்கமாகவே இருக்கும். ஏனென்றால் பங்குச் சந்தை, கடன் பத்திர முதலீடுகள் எல்லாம் கூட எப்போதும் பாசிட்டிவாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. அதேபோல நிலத்தில் முதலீடு செய்தாலும், அதற்கு லோன் கிடைப்பது அவ்வளவு ஈஸி இல்லை. ஆனால், தங்கம் அதுபோல இல்லை. எங்குச் சென்று கேட்டாலும் தங்கத்திற்கு எளிதாகக் கடன் கிடைக்கும்.
ஏன் முக்கியம்: நாட்டை விட்டே வெளியேறினாலும் கூட தங்கத்தை எடுத்து வந்தால் எளிதாக புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என்பது ஆனந்த் சீனிவாசன் கருத்து. இதன் காரணமாகவே நாம் தங்கத்தை வாங்க வேண்டும். உயர் அடுக்கில் இருப்போருக்குத் தங்கம் தேவைப்படாது. ஏனென்றால், அதில் இருந்து பெரிய லாபம் கிடைக்காது. இருப்பினும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அப்படி இல்லை. எந்தவொரு ஆபத்தான காலத்திலும் தங்கமே அவர்களைக் காப்பாற்றும்.
இதன் காரணமாகவே ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 400 கிராம் தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என ஆனந்த் சீனிவாசன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தங்கம் எப்போதும் சரிந்ததே இல்லை. இதுவும் அதற்கு ஒரு பாசிட்டிவ் விஷயம். கொரோனாவுக்கு முன்பு வரை 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 4000 ரூபாய்க்குக் கீழ் தான் வர்த்தகமாகி வந்தது. அதேநேரம் கொரோனாவுக்கு பிறகு உடனடியாக உச்சம் தொட்டு 2020இல் 5,700 வரை கூட சென்றது. சீக்கிரம் 6000 கடந்தது.
குறைய என்ன காரணம்: அதன் மிக பெரியளவில் ஏற்றம் காணவில்லை. கடந்த 3 மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்தே வருகிறது. இப்போது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 5900 என்ற அளவில் இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருவது தங்கம் விலை பெரியளவில் அதிகரிக்காமல் இருக்கக் காரணமாக இருக்கிறது. இதனால் இந்த நேரத்தைப் பயன்படுத்தித் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.
அடுத்து ஓரிரு முறை அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போதெல்லாம் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம் தங்கம் எப்போது குறைந்தபட்ச விலையில் இருக்கும் என யாராலும் சொல்ல முடியாது என்பதால் இப்போதில் இருந்தே தங்கத்தை மெல்லச் சேர்க்கச் சொல்கிறார் ஆனந்த் சீனிவாசன். வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதால் அடுத்த ஒரு 15 மாதங்களுக்குத் தங்கத்தின் விலை இப்படியே தான் இருக்குமாம்.
எப்போது அதிகரிக்கும்: மறுபுறம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறைக்க ஆரம்பித்தவுடன் தங்கத்தின் விலை மளமளவென அதிகரிக்கத் தொடங்கிவிடும். வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கியதும் 22 கேரட் தங்கமே 2025இல் 7000 ரூபாயைத் தொட வாய்ப்புள்ளதாக ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகிறார். எனவே முடிந்தவரைத் தங்கத்தை இப்போது வாங்குவது சரியானதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications