என்னாது.. சென்னை - சேலம் 8 வழிச்சாலை வரப்போகிறதா? லோக்சபாவில் நிதின் கட்கரி அளித்த பதில் இதுதான்!
சென்னை: சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கேள்வி நேரம் இருந்தது. அப்போது சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளதா? இந்த திட்டத்தின் மொத்த செலவு எவ்வளவு?
எப்போது பணிகள் தொடங்கி நிறைவு பெறும்? என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.

நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர்
இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தின் மொத்த மதிப்பு 7 ஆயிரத்து 230 கோடி ரூபாய் ஆகும். எந்தெந்த பாதையில் சாலை அமைக்கப்படும் என்பது குறித்து மாநில அரசின் கருத்துக்காக காத்திருக்கிறோம்.

மாநில அரசு
மாநில அரசின் கருத்துகள் வரப்பெற்றவுடன் பணிகள் தொடங்கும் என அந்த கடிதத்தில் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பாமக நீதிமன்றத்தை நாடியது. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

8 வழிச்சாலை
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தும் போது விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டப்பட்டது. சேலத்திற்கு சென்னைக்கு வர அதிக நேரம் எடுத்துக் கொள்வதால்தான் 8 வழிச்சாலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் முழுமை பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்பு
4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் பொதுமக்களின் எதிர்ப்பால் முடங்கியது. இந்த திட்டத்தின் பழைய மதிப்பீடு ரூ 10 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது 12 ஆயிரம் கோடி முதல் 1 ஆயிரம் கோடி ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த திட்டத்திற்கு விவசாய நிலத்தை தவிர்த்துவிட்டு வனப்பகுதியை ஒட்டிய நிலங்கள், அரசு நிலங்களை கொண்டு 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications