ஜொலிஜொலிக்குதே தென்காசி.. மேட்டர் என்ன தெரியுமா.. டாக்டர் முதல்ல.. அப்பறம் "ஷ்யாம்".. அப்ப அதேதானா
சென்னை: எம்பி தேர்தல் விரைவில் வரஉள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. இதில் பாஜகவுடன் இணக்கமாக செல்லும் கட்சிகள் பெருகி வருகின்றன.. மற்றொருபக்கம் அதிமுக தலைமையிலான கூட்டணி அமையுமா? அல்லது பாஜக தலைமையிலான கூட்டணி அமையுமா என்று தெரியவில்லை.. எனினும், புதிய தமிழகம் கட்சி தன்னுடைய தேர்தல் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.
பட்டியல் மாற்றம் என்பதே தேவேந்திரகுல வேளாளர்களின் நிரந்தர இலக்காகும். பெயர் மாற்றம் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய சமூக அடையாளமாக கருதப்பட்டாலும் பட்டியலினத்திலிருந்து விலக்கு பெறாமல் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் விடுதலை பெற்றதாகவோ முழு அங்கீகாரத்தையும் பெற்றதாகக் கருத இயலாது என்பதைதான் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மாபெரும் தவறு: கடந்த வருடம் ஒரு கூட்டத்தில் கிருஷ்ணசாமி பேசும்போது, "கடந்த காலங்களில் சில இடங்களுக்கு அவசரப்பட்டு கூட்டணி வைத்து தவறிழைத்து விட்டோம்.. நமக்கு அமைந்த கூட்டணிகள் நேர்மையான கூட்டணி இல்லை.. நம்முடைய வாக்குகளை அவர்கள் பெற்று வெற்றி பெற்றார்கள்.. இனி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும், இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம்" என்று கூறியிருந்தார்
அந்தவகையில், புதிய தமிழகம் கட்சியின் அரசியல் நகர்வு, ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது.. கடந்த நவம்பர் 15-ல், புதிய தமிழகம் கட்சியின் 25 வருட ஆண்டு விழா மாநாடு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்டமாக நடந்தது..

செல்வாக்குமிக்க ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான், தேவேந்திர குல வேளாளர் சமூகவாக்குகளும் மிக அதிகம்... ஆனாலும், ஓட்டப்பிடாரத்தில் போதுமான வெற்றியை சுவைக்க முடியாததால், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியை குறிவைக்கவே, இப்படி ஒரு மாநாட்டை டாக்டர் கிருஷ்ணசாமி முன்னெடுப்பதாக சலசலக்கப்பட்டது.
புதிய அலுவலகம்: இந்நிலையில், தென்காசி எம்பி தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சி தேர்தல் அலுவலகத்தை கிருஷ்ணசாமி தற்போது திறந்து வைத்துள்ளார்.. செய்தியாளர்களிடம் இதை பற்றி சொல்லும்போது, "தேர்தலை மட்டும் மையமாக வைத்து நாங்கள் செயல்படவில்லை. 1998 முதல் தென்காசி தொகுதியில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மக்களுக்கு கூடுதலாக பணியாற்ற முடியும். கடந்த 4 ஆண்டுகளாக தென்காசி தொகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. அனைத்து மக்களவை தொகுதிகளிலும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகம் திறக்க உள்ளோம். இதன் மூலம் மக்கள் குறைகளை கேட்டறிவோம்" என்றார்.
ஷ்யாம் பேச்சு: புதிதாக அலுவலகத்தை திறந்துவைத்துள்ளதால், ஒருவேளை, தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. மற்றொருபுறம், டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன், இதே தென்காசி தொகுதியில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருவதால், இந்த சந்தேகம் மேலும் எகிறி உள்ளது.. ஒருவேளை இந்த தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுவாரா? அல்லது அவரது மகன் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது.
காரணம், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தென்காசி தொகுதிஐய குறி வைத்து புதிய தமிழகம் கட்சி வேலைகளை இழுத்து போட்டு செய்து வருவதும் மக்களை கவனிக்க செய்து வருகிறது.. பூரண மதுவிலக்கு கோரி, ஆர்ப்பாட்டமும் இதே தென்காசியில்தான் நடத்தப்பட்டது. இதிலும் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், இளைஞரணி தலைவருமான ஷ்யாம் உரையாற்றியதும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
கூட்டணி: எனவே, எப்படி பார்த்தாலும், இந்த முறை கூட்டணி வைத்துதான் புதிய தமிழகம் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. 2 சீட் கிடைத்தால், அதில் ஒன்றில் ஷ்யாம் நின்று போட்டியிடுக்கூடு என்கிறார்கள்.. ஒருவேளை, கூட்டணி இல்லாவிட்டால் ஷ்யாம் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், புதிய தமிழகம் கட்சி இன்னமும் தன்னுடைய வாக்குவங்கியை பலமாக வைத்திருப்பதால், தென்காசியில், புயல் அடித்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications