சென்னை- கடலூர் வரை கூட்டம் கூட்டமாக மேகங்கள்.. எத்தனை தூரத்தில் இருக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி?
சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையிலிருந்து 850 கி.மீ தூரத்தில் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் கடந்த 3 தினங்களாக மழை கொட்டி வருகிறது. வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என தலைநகர் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
ஏற்கெனவே பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் வடியாத நிலையில் இன்று அதிகாலை சென்னையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை
நேற்றும் இன்றும் தமிழகத்தில் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்தம்
இந்த நிலையில் நேற்றைய தினம் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது சென்னையிலிருந்து 850 கிமீ.தூரத்தில் உள்ளது.

நாளை கடலூரை நெருங்கும்
இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை சென்னை- கடலூர் இடையே நெருங்கும். இதனால் சென்னை- கடலூர்- தெற்கு ஆந்திரா வரை மேகக் கூட்டங்கள் திரண்டுள்ளது. இதன் எதிரொலியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலூர்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நாளை வரை வீட்டிற்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழமையான மரங்கள் அருகே செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications