அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும்? மோடி அழைப்புக்கு மறுநாள் எடப்பாடி சொன்ன பதில்!
Recommended Video
சென்னை: தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மதியம், நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
முதல்வர் கூறியதாவது: அனைத்து மக்களும் சிறப்பாக பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் பொங்கல் பரிசாக, அரிசி, வெல்லம் போன்றவை வழங்கப்படுகிறது.
அதிமுக செல்வாக்கு
ரேஷன் கடைகள் மூலமாக, மக்களுக்கு இலவச, வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதால், அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. கிராமத்தையே இதுவரை பார்க்காத ஸ்டாலின், தற்போது ஊர் ஊராக செல்வது வேடிக்கையாக உள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர் போன்ற பொறுப்பில் இருந்த ஸ்டாலினுக்கு இப்போதுதான் கிராமத்தின் ஞாபகம் வந்திருக்கிறது.
கிராமத்தில் பிறந்தவர்கள்
இந்த மேடையில் அமர்ந்துள்ள, நான், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோரெல்லாம் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தேவையை அறிந்தவர்கள். ஆனால் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து கிராமத்தை பார்க்காதவர் ஸ்டாலின். கிராமம்தான் அடிப்படை என்பதை இப்போதுதான் கண்டுபிடித்துள்ளார்.
விமர்சனம்
கிராம சபை கூட்டங்களில், அதிமுக அரசை பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார். உள்ளாட்சி தேர்தல்களை நடத்த அரசு முட்டுக்கட்டை போடுவதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார். திமுகதான் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும். துரோகம் இழைப்பவர்களுக்கு ஆதரவு தரமாட்டோம். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதிமுகவில் எந்த அடிப்படை தொண்டனும் தமிழகத்தின் முதல்வராகலாம் என்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே சாட்சி என்று ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டினார்.
மோடி அழைப்பு
லோக்சபா தேர்தல் வருவதையொட்டி, பழைய நண்பர்களுக்கு கூட்டணி வைப்பதற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என நேற்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில், துரோகம் இழைப்பவர்களுக்கு ஆதரவு கிடையாது என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. பாஜக தமிழகத்திற்கு நல்லது செய்துள்ளது, எனவே அதனோடு அதிமுக கூட்டணி அமைக்கும் என்று எடப்பாடி கூறுகிறாரா அல்லது, பாஜக தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டது, அதனால் கூட்டணி இல்லை என்று கூறுகிறாரா என்று புரியாமல் தவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.