யார் இந்த சோட்டா வினோத்? அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் புள்ளிகளை ஆட்டிப்படைத்த ரௌடிகள் என்கவுன்ட்டர்
சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலையில் நடந்த என்கவுன்ட்டரில் 2 ரௌடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அந்த ரௌடிகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கும்பல் நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கூடுவாஞ்சேரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக கருப்பு நிற ஸ்கோடா கார் ஒன்று வந்துள்ளது. அந்தக் காரை போலீசார் நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்று காவல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல சென்று, ஜீப்பில் மோதி நின்றுள்ளது.

என்கவுன்ட்டர்: அந்த காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய நான்கு ரவுடிகள், போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனுக்கு வெட்டு விழுந்துள்ளது. போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக இருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மற்ற இருவர் தப்பி ஓடியுள்ளனர். போலீசாரால் சுடப்பட்ட ரௌடிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் கொலை, கூட்டுக்கொலை, வெடிகுண்டு வீசி தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சோட்டா வினோத், மண்ணிவாக்கம் ரமேஷ்: என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோட்டா வினோத் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவருக்கு வலது கரமாக இருந்து வந்துள்ளார். பின்னர், அந்த ரவுடியிடம் இருந்து பிரிந்த சோட்டா வினோத் மண்ணிவாக்கம் ரமேஷ் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வளர்ந்து வரும் பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஆதனூர் உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், லாரி, ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள், பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது சோட்டா வினோத் கும்பல். இந்த கும்பலால் அப்பகுதியைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டல்: கட்சி வேறுபாடு இன்றி பல்வேறு அரசியல்வாதிகளுக்கும் இவர்கள் குடைச்சல் கொடுத்து வந்துள்ளனர். அதிமுக பெண் நிர்வாகி ஒருவரின் கணவரை பணம் கேட்டு மிரட்டியதாக சோட்டா வினோத் டீம் மீது புகார் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பிரமுகர் சக்கரபாணி என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டி, அவர் தராததால் கொடூரமாக வெட்டிய வழக்கில் சோட்டா வினோத் மற்றும் மண்ணிவாக்கம் ரமேஷை போலீசார் தேடிவந்தனர்.
இப்படி, பல்வேறு தொழில் செய்பவர்களிடம் மிரட்டி பல லட்சம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரௌடி சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்குகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மன்னிவாக்கம் ரமேஷ் மீது 5 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாட்டு வெடிகுண்டு ஸ்பெஷலிஸ்ட்: நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்வதில் இந்த டீம் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்துள்ளது. தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் மாமூல் கேட்டு தொடர்ந்து சோட்டா வினோத், மண்ணிவாக்கம் ரமேஷ் டீம் தொல்லை கொடுத்து, அரசியல்வாதிகளையும், ரியல் எஸ்டேட் பிரமுகர்களையும் மிரட்டி வந்துள்ள சோட்டா வினோத், ரமேஷ் ஆகியோர் இன்று என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளது அப்பகுதி ரௌடிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications