திருமாவுக்கு பதில் மாஜி காங். தலைவரின் மகன் போட்டி.. காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் ஜோதிமணி யார்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விசிக சார்பில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியடுவதாக திருமாவளவன் அறிவித்து இருந்தார். ஆனால் இன்று தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார். மேலும் அவருக்கு பதிலாக காட்டுமன்னார் கோவில் தொகுதியில் ஜோதிமணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த ஜோதிமணி யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக விசிகவின் திருமாவளவன் அறிவித்தார். திமுக கூட்டணியில் அந்த தொகுதி விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திருமாவளவன் கடந்த 3ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால் திடீரென்று இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து காட்டுமன்னார் கோவில் தொகுதி வேட்பாளராக ஜோதிமணி என்பவரை அறிவித்தார்.
ஜோதிமணி யார்?
விசிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி கடந்த 1955ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி பிறந்தார். இவருக்கு வயது 71. இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். மனைவி பெயர் மங்கள லெச்வி. இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். 2 மகள்கள் உள்ளன. மூத்த மகள் பெயர் இளைய புரட்சி. இவர் பல்மருத்துவர். 2வது மகள் பெயர் இளைய தென்றல். இவர் டிப்ளமோ கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார்.
மாஜி காங்கிரஸ் தலைவரின் மகன்
ஜோதிமணியின் தந்தை பெயர் இளையபெருமாள். இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீண்டகாலம் போராடியவர். அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டின் முதல் தலைவராக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவுவும் இருந்தார். ஒருமுறை எம்எல்ஏவாகவும், 4 முறை எம்பியாகவும் இருந்தார்.
காங்கிரஸ்காரர் என பேட்டி
இதுபற்றி ஜோதிமணி கூறுகையில், ''காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட நான் காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு கொடுத்திருந்தேன். இப்படி இருக்கையில் திடீரென திருமாவளவன் அறிவித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இப்போது காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன்.
காங்கிரஸும், விசிகவும் திமுக உடனான கூட்டணியில்தான் இருக்கின்றன. எனவே இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்தாலோசித்து, அவர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். நான் எந்த இயக்கத்தில் இருந்தாலும் எனக்கு வாய்ப்பளித்த திருமாவளவனுக்கு நன்றி" என்றார்.
விவாதமான விவகாரம்
ஜோதிமணியின் இந்த பேட்டி தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. திமுக கூட்டணியில் விசிக குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டது. ஆனால் திமுக 8 தொகுதிகளை மட்டுமே வழங்கியது. இப்படியான சூழலில் கிடைத்த 8 தொகுதியிலும் ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை திருமாவளவன் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் என்ன விஷயம் உள்ளது? என்பது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடாமல் பின்வாங்கியது மற்றும் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை அறிவித்து இருப்பது தொடர்ந்து விவாதமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications