டி.ஆர். பாலுவா.. ஆ. ராசாவா.. கனிமொழியா.. தீவிர யோசனையில் மு.க.ஸ்டாலின்!
சென்னை: நாடாளுமன்ற மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள திமுகவின் மக்களவைக் குழு தலைவர் யார் என்ற தீவிர யோசனையில் உள்ளாராம் மு.க. ஸ்டாலின்.
கடந்த மக்களவையைப் போலவே இம்முறையும் தமிழகத்தை சேர்ந்த கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளது. அப்படி 3 வது பெரிய கட்சியாக வந்துள்ள திமுகவின் மக்களவை தலைவராக யாரை நியமிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தீவிர யோசனையில் உள்ளாராம்
16 வது மக்களவைக்கு கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது மூன்றாவது பெரிய கட்சியாக 37 எம்.பிக்களோடு கோலோச்சியது தமிழகத்தை சேர்ந்த அதிமுக. 17 வது மக்களவைக்கு இப்போது நடந்து முடிந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரசுக்கு 22 உறுப்பினர்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 22 எம்.பிக்களும் உள்ளனர்.
இந்த இருகட்சிகளை விட அதிகமாக திமுகவுக்கு மொத்தம் 23 எம்.பிக்கள் உள்ளதால் இந்த நாடாளுமன்றத்தில் திமுக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. அதாவது திமுகவுக்கு 19 உறுப்பினர்களும், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற வகையில் 4 உறுப்பினர்களும் உள்ளனர். இப்படியாக மொத்தம் 23 உறுபினர்கள் திமுகவுக்கு உள்ளனர்.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய 18 பேர்.. அதில் நீந்தி கரை சேர்ந்தவர் ஒருவரே!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், மதிமுகவின் கணேசமூர்த்தி, கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜ், இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோரை சேர்த்து திமுகவுக்கு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக 23 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் ஆளும் பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகிய காட்சிகளுக்கு அடுத்தபடியாக திமுக உள்ளது.
இப்படி மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள திமுகவுக்கு மக்களவைத் தலைவராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் திமுகவினரிடையேயும் உள்ளது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் வென்றதில் சீனியர்கள் சிலர் உள்ளனர். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், கனிமொழி மற்றும் பழனிமாணிக்கம் என்று நாடாளுமன்ற அனுபவம் மிக்க உறுப்பினர்கள் உள்ளனர். இதில் கனிமொழி மாநிலங்களவை திமுக குழுத் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஆகவே இவர்களில் யாரை திமுக குழுத் தலைவராக தேர்வு செய்வது என்று திமுக தலைவர் ஸ்டாலின் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.