கதையே மாறுதே.. “கூட்டணி யாருடன்?” அலற விட்ட ஜான் பாண்டியன்.. ஷாக் ஆன பாஜக, அதிமுக!
சென்னை: திமுக கூட்டணியில் சேரமாட்டோம் என யார் சொன்னது என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் அதிரடியாக கூறியுள்ளது பாஜகவை அதிர வைத்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களோடு ஜான் பாண்டியன் கலந்து கொண்டார். அதேசமயம், அதிமுகவுடன் நல்ல இணக்கமாகப் பயணித்து வந்தார்.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்ததைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக திடீரென விலகியது. இதையடுத்து, அதிமுகவை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோர் முயற்சி செய்தனர். எனினும், பாஜக - அதிமுக கூட்டணி இணைப்பு நடக்கவில்லை.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமமுக ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பாஜக கூட்டணியில் தொடர்வார்களா அல்லது அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் சேர்வார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தமமுக தலைவர் ஜான் பாண்டியன், பாஜக மற்றும் அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் இல்லத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், "தற்போதைய அரசியல் சூழலில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிலும் இல்லை. அதிமுக கூட்டணியிலும் இல்லை. பாஜகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில் பாஜகவும், அதிமுகவும் ஒன்றிணைந்தால் மகிழ்ச்சி. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பில்லை தானே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "அது எப்படி வாய்ப்பில்லை என்று நீங்கள் முடிவெடுக்கலாம், நாங்கள்தானே முடிவெடுக்க வேண்டும்? ஏன் திமுக கூட்டணியில் சேர முடியாது. அப்படி சொல்ல முடியாது. அரசியலில் தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம், பகையும் இல்லை, நண்பரும் இல்லை. சூழ்நிலையை பொறுத்தது. அரசியல் என்பது சூழ்நிலைதான்" எனத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியை உறுதிப்படுத்தும் வேலைகள் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு சீட் பகிர்வு பேச்சுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கூட்டணி தொடர்பாக ஜான் பாண்டியன் கூறியுள்ள கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. திமுக கூட்டணியில் சேரும் திட்டத்தில் ஜான் பாண்டியன் இருக்கிறாரா என பாஜக, அதிமுக தரப்புகளும் குழப்பமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications