சிக்கலில் 3 அமைச்சர்கள்.. அடுத்து சிக்கப்போகும் திமுக அமைச்சர் இவர்தான்.. அண்ணாமலை பரபர!
சென்னை: திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து வருகிறது. இந்நிலையில், அடுத்து சிக்கப்போகும் அமைச்சர் இவர்தான் எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்தது. நேற்று முன் தினம் இந்த வழக்குகளின் விசாரணையின்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் லஞ்ச ஒழிப்புத்துறை யூ டர்ன் போட்டுள்ளது என்றும் சரமாரியாக விமர்சித்தார் ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் குற்ற நீதி பரிபாலனத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது, மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என நீதிபதி தெரிவித்தார்.
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தங்களுடைய பதவியை தவறாக பயன்படுத்துகின்றனர். கீழமை நீதிமன்றம் வேறு நபர்கள் சொல்லி இருக்கும் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றனர்.
நீதிமன்றத்திலும் திமுக தலையீடு இருக்கிறது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் ஊழல் அரசு போல் வேறு எங்கும் இல்லை. தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையை கலைக்க வேண்டும்.
மேலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மனு போட்டு இருக்கிறது. இன்னும் அடுத்து அமைச்சர் கீதா ஜீவன் மீது வழக்கு வரும். செய்திகளின் அடிப்படையில் தான் பேசுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி அமைச்சராக இருந்தபோது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் கீதா ஜீவன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் தான் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கும் மீண்டும் தோண்டப்படும் என அண்ணாமலை கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications