புயல் பாதிப்பு நிவாரண தொகை ரூ.6000.. சென்னையில் யாருக்கு எல்லாம் கிடைக்கும்? அமைச்சர் மா.சு விளக்கம்
சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்புகள் காரணமாகப் பொதுமக்களுக்கு ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயல் சென்னை அருகே கரையைக் கடக்கவில்லை என்றாலும் சென்னை அருகே வந்த போது இது தீவிர புயலாக வலுப்பெற்றது.

இதன் காரணமாக ஞாயிறு இரவு ஆரம்பித்த மழை செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை கொட்டியது. இடைவிடாமல் கொட்டித் தீர்த்த இந்த கனமழையால் சென்னையில் அனைத்து இடங்களிலும் நீர் தேங்கியது.
சென்னை வெள்ளம்: இது சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. மழை நின்ற பிறகு நிவாரண பணிகள் தொடங்கப்பட்டது. இப்போது முக்கிய சாலைகளில் நீர் வடிந்துவிட்ட போதிலும், இன்னும் சில உட்புற சாலைகளில் நீர் இருக்கவே செய்கிறது. இதை ராட்சத மோட்டர் மூலம் அகற்றும் பணிகளும் நடந்து வருகிறது. இருப்பினும், சில இடங்கள் இன்னுமே இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
பல இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கே சிக்கல் ஏற்பட்ட நிலையில், இப்போது தான் சென்னை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதற்கிடையே மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
ரூ. 6000: இதற்கிடையே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் இந்த நிவாரண தொகை யாருக்குக் கிடைக்கும் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "இன்று காலை தமிழக முதல்வர் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அமைச்சர் மா சுப்பிரமணியன்: என்ன தான் தமிழ்நாட்டில் நிதி நிலை சிக்கலாக இருந்தாலும் கடந்த ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து வைத்திருந்தாலும் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தார். அதற்காகத் தான் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் நிவாரணமாக ரூ.6000 அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்குக் கிடைக்கும்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கெல்லாம் மிக்ஜாம் புயல் காரணமாகப் பாதிப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 16 தாலுக்காக்கள் உள்ளன. இந்த 16 தாலுக்காக்களிலும் மழை பாதிப்பு இருப்பதால் அனைவருக்கும் நிவாரணம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கே பாதிப்பு இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்களோ.. அங்கே வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். புயல் காரணமாக பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இது பெரியளவில் உதவும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications