யார் யாருக்கெல்லாம் "1000 ரூபாய்" உரிமைத்தொகை கிடைக்கும்? இதோ, திமுக அமைச்சர் தரும் விளக்கம் பாருங்க
யாருக்கெல்லாம் 1000 ரூபாய் உரிமைத்தொகை கிடைக்கும் என கீதா ஜீவன் விளக்கம் தந்துள்ளார்
சென்னை: தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் யார், யாருக்கு கிடைக்கும் என்று தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் தந்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் 2023 - 24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் நேற்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது... இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார்.
இதில் தமிழக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மிக முக்கிய அறிவிப்பான மகளிருக்கான உரிமைத்தொகை அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது...

சூப்பர் அறிவிப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது.. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று பிடிஆர் அறிவித்தார்.. அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று நிதியமைச்சர் இதுகுறித்து தெரிவித்துள்ளார் என்றும் புரட்சி ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

இடியாப்ப குழப்பம்
தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது... ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பி வருகிறது.. அதுபோலவே, அமமுகவும் கேள்வி கேட்டுள்ளது.. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்றுதான் புரியவில்லை என்று கேட்கிறார் டிடிவி தினகரன்.. எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்று கேட்கிறார் பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.

ஹாப்பி
இப்படி பல குழப்பங்கள் நிலவிவரும் நிலையில்தான், தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் யார், யாருக்கு கிடைக்கும் என்று தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்... அதில், "அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு இதுதான்.. ஏனென்றால் ஏற்கெனவே 2 இடங்களில் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் அறிவிப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். அரசியல் நோக்கர்கள், சாதாரண மக்கள் ஆகியோரால் எதிர்பார்க்கப்பட்ட அந்த அறிவிப்பு, இப்போது பட்ஜெட் தாக்கலின்போது வெளியாகியுள்ளது. இது அனைவருக்கு மகிழ்ச்சியை தரும் அறிவிப்பாக அமைந்துள்ளது.

கூட்டிட்டு போ
பெண்களால் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இது. எல்லாராலும் வரவேற்கப்படும் திட்டமாக இது நிச்சயம் அமையும். முதலமைச்சர் அவருடைய கண்காணிப்பில் தகுதியுடைய நபருக்கு இந்த திட்டம் சென்று சேர்வதை நிச்சயம் உறுதி செய்வார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை இந்த அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் நிறைய பெண்கள் பயனடைந்து வருகின்றனர்... கணவரையோ, மகனையோ அங்கு சென்று கொண்டு விடு' என்று கேட்டு கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.. இப்போது பஸ்ஸில் ஏறி கட்டணமின்றி பெண்கள் செல்ல தொடங்கிவிட்டனர். இதுமட்டுமல்லாமல் இது ஒரு சேமிப்பாகவும் பெண்களுக்கு இருக்கிறது.

கைம்பெண்கள்
இதேபோல், ரூ.1000 உரிமைத் தொகையும் அவர்களுக்கு சேமிப்பாக அமையும். புதுமைப் பெண் திட்டம் உயர்கல்விக்கு வித்திடுகிறது. அது பெண் கல்வியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டமாகும். மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கும் அளிக்கப்படும் என்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும். இதுதொடர்பான அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியாகும். ஏற்கெனவே, மாதம் ரூ.1000 உதவித் தொகை பெற்றுவரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் இதில் மறுபடியும் பயனடைய மாட்டார்கள்.

கைடுலைன்
வருமான வரி செலுத்தும் பெண்களும் பயனடைய மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. எனவே, இதுதொடர்பாக வழிகாட்டுதல்களை முதல்வர் விரைவில் வெளியிடுவார். கண்டிப்பாக ஏழை, எளிய, நடுத்தர குடும்பப் பெண்கள் நிச்சயமாக ரூ.1000 உரிமைத் தொகையைப் பெறுவார்கள்" என்று தெரிவித்துள்ளார் கீதா ஜீவன். அப்படியானால் அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் கிடைக்காதா?, எல்லா பெண்களுக்கும் 1000 ரூபாய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் தற்போது வெடித்து கிளம்பி வருகின்றன.












Click it and Unblock the Notifications