புதிய ரேசன் கார்டுகள் யாருக்கு கிடைக்காது?..உணவுப்பொருள் வழங்கல் துறை புதிய உத்தரவு
திறக்கப்படாத ரேசன் கடைகள் குறித்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்படும் என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னை: நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் POS இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை இவற்றின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அரிசி அட்டை, சர்க்கரை அட்டை என சுமார் 1,96,16,093 ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் POS இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இருப்பு வைத்துக் கொண்டு விநியோகிக்காமல் இருத்தல் கூடாது. சரியாக 9 மணிக்கு நியாய விலை கடைகளை திறந்து பொருட்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திறக்கப்படாத கடைகள் குறித்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்படும் எனவும், ஒரே நபர் வெளி மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் குடும்ப அட்டை வைத்து பொருட்கள் பெற்று வருவது குறித்து கள விசாரணை செய்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications