ஆமா.. அதெப்படி திடுதிப்புன்னு அதிமுக-பாஜக கூட்டணி "உடைந்தது?" காரணம் என்ன?
சென்னை: ஆமா.. திடீரென எதற்காக பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. இது தொடர்பான கேள்வி தமிழக அரசியலை கவனிக்கும் ஒவ்வொரு சாமானியனுக்கும் எழுகிறது.
இது தொடர்பாக நமது சிறப்பு நிருபர் தரும் தகவல்களை அவ்வப்போது உங்களுக்கு செய்தி வடிவில் வழங்கி வருகிறோம். அதேநேரம், இந்த விவகாரத்தில் திரைமறைவில் பல விஷயங்கள் நடப்பதாக நமது நிருபர் அலர்ட் தந்தபடி உள்ளார். எனவே வலது பக்கம் இன்டிகேட்டர் போட்டுவிட்டு இடதுபக்கம் வண்டியை திருப்பவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இதில் ஒரு இன்டிகேட்டரை ஒன்இந்தியா தமிழின், சீனியர் ஊடகவியலாளர்களில் ஒருவரான நெல்சன் சேவியர் தனது பதிவில் இன்னும் கொஞ்சம் விரிவாக அலசியுள்ளார். அந்த பதிவு இதோ:
காரணமே இல்லையே: பாஜகவை விட்டு பிரிவதற்கான, விலகுவதற்கான எந்த உடனடி தேவையும் முகாந்திரமும் அதிமுகவிற்கு இப்போதைக்கு இல்லை. கடந்த இரண்டாண்டுகளில் அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த மாற்றமும் நடந்துவிடவில்லை. ஊழல் ஒழிப்பு, நேர்மை குறித்தெல்லாம் தமிழ்நாட்டிற்கு பாடம் எடுக்கும் ஆளுநர் ஆர் என் ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க இப்போதுவரை தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை. அந்த அளவிற்கு உறுதியான கூட்டணி அது.
கடந்த காலம்: அதிமுக தலைவர்களை ஆண்மையற்றவர்கள் என அழைத்தது தொடங்கி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாஜக தலைவர்கள் அவதூறாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சைகளுக்கு பின்பும்கூட, சமீபத்தில் டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் முதல் வரிசையில் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கியபடி புன்னகையோடு நின்றிருந்தார் எடப்பாடி. அந்த அளவிற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி அது.
அதிமுக வலிமை: பாஜகவையோ, மாநில தலைவர் அண்ணாமலையையோ தேர்தல் களத்தில் எப்படி சந்திக்க வேண்டும் என்று அதிமுகவில் இருக்கும் கடைக்கோடி தொண்டனுக்கு கூட தெரியும். ஏனெனில் கலைஞரை எதிர்த்து களத்தில் அரசியல் செய்த கட்சி அதிமுக. அதன் அனுபவமிக்க தலைவர்களுக்கா இவற்றை எதிர்கொள்ளத் தெரியாது. அவர்களா அண்ணாமலையைக் கண்டு அஞ்சுகிறார்கள். சசிகலாவையே இடதுகையால் உதறித்தள்ளிய எடப்பாடி அதிமுகவிற்கு அண்ணாமலை எம்மாத்திரம்?
அண்ணாவே சிரிப்பார்: அறிஞர் அண்ணாவை அவமானப்படுத்தி விட்டார்கள் என்பதால் கூட்டணி முறிகிறது என்று யாராவது சொன்னால் அண்ணாவே எழுந்து வந்து சிரிப்பார். சமத்துவம், சகோதரத்துவம், மாநில சுயாட்சி என அண்ணாவின் அரசியல் ஆன்மாவை பாஜகவிற்காக ஒவ்வொன்றாக சிரித்துக் கொண்டே கை கழுவிய கட்சி அதிமுக. இப்போது கூட குறைந்தபட்சம் பாஜகவின் கொள்கைகளுக்காகவோ, ஜனநாயகத்தை காப்பாற்றவோ கூட்டணியை முறித்ததாக பேருக்காக கூட அதிமுக அறிவிக்கவில்லை. அந்த அளவிற்கான இணக்கமான கொள்கைக் கூட்டணி அது.
அடுத்த பிரதமர் மோடிதான்' என நேற்றுவரை சொன்னவர்களின் இன்றைய விலகல் அறிவிப்பு எல்லாவகையிலும் ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம். இந்த ஓரங்க நாடகத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் அரங்கேறும், என்கிறது அந்த பதிவு.












Click it and Unblock the Notifications