"விஜய்கிட்ட கேட்குறீங்களா இத?” பிரஸ் மீட்டில் கூலாக கேட்ட சீமான் மனைவி கயல்விழி!
சென்னை: இன்று செய்தியாளர் சந்திப்பின்போது கேள்விக்கு பதில் அளித்த கயல்விழி சீமான், "விஜய்கிட்ட கேட்குறீங்களா வெளிப்படையா பேசுங்கன்னு.. என்னை மட்டும் வந்து கேட்குறீங்க" என சிரித்தபடியே கூறினார்.
நடிகை விஜயலட்சுமி தொடர்புடைய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அவரது வீட்டின் கதவில் நேற்று போலீசார் சம்மன் ஒட்டினர். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த சம்மன் கிழிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க சென்ற நீலாங்கரை போலீசாருக்கும் சீமான் வீட்டு பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சீமான் வீட்டு பாதுகாவலர் அமல் ராஜ் மற்றும் உதவியாளர் சுபா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவருக்கும் மார்ச் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீமான் வீட்டு வாசலில் சம்மனை இங்கே ஒட்டவும் என போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீமானின் மனைவி கயல்விழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கதவில் சம்மன் ஒட்டினால் அதனை சுத்தம் செய்ய கஷ்டமாக இருப்பதால் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இனி காவல் துறையினர் எத்தனை சம்மனை வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளலாம்." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கயல்விழி, "சம்மனை படிக்க வேண்டும் என்பதற்காக நான்தான் கிழிக்குமாறு கூறினேன். காவல்துறையினர் சம்மனை என்னிடம் வழங்கியிருக்கலாம். அல்லது வீட்டில் உள்ளவர்களிடம் வழங்கியிருக்கலாம். கையெழுத்துப் போட்டு சம்மனை வாங்க தயாராகத்தான் இருந்தோம். ஆனால் என் கணவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சம்மனை வீட்டு கேட்டில் ஒட்டினார்கள்.
என் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனைப் படிக்க வேண்டும் என்பதற்காக கிழித்து கொண்டு வர சொன்னேன். போலீசார் ஒட்டிய சம்மனை எடுத்து வைத்து நான் படித்துக் கொண்டிருந்தேன். எங்களை விட எங்களுடன் இருப்பவர்கள் மீது கை வைத்தால் தான் கோபம் வரும். நான் சொல்லி தான் அந்த தம்பி கிழித்தார்.
சம்மனை கிழிக்க சொன்னது தவறு என்றால் என்னை கைது செய்ய வேண்டியதுதானே. மனரீதியாக எங்களை துன்புறுத்த வேண்டும் என போலீசார் செயல்படுகின்றனர். நடந்தது என்ன என்று முழுவதும் தெரியாமல் நீலாங்கரை இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்பு கேட்டேன்." எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமியை யார் இயக்குவதாக நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கயல்விழி, "காவல்துறையை யார் இயக்குகிறார்களோ அவர்களேதான் அவரையும் திட்டம் வகுத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்." எனத் தெரிவித்தார்.
அதற்கு செய்தியாளர் ஒருவர், "அதை வெளிப்படையாக சொல்லலாமே?" எனக் கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே பதில் சொன்ன கயல்விழி, "விஜய்கிட்ட கேட்குறீங்களா வெளிப்படையா பேசுங்கன்னு.. என்னை மட்டும் வந்து கேட்குறீங்க.. காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? திமுக அரசு கட்டுப்பாட்டில் தானே.. அவங்கதான் செய்றாங்க" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று ஓசூரில் பேட்டியளித்த சீமான், "விசாரணைக்கு எல்லாம் ஆஜராக முடியாது. உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்க" என பேசினார். இந்த சூழலில் சீமான் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராவார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications