சென்னையில் கொரோனா உயிரிழப்பு ஏற்படாதது ஏன்?.. 2ஆவது அலையில் முதல்முறை எப்படி சாத்தியம்?
சென்னை: சென்னையில் நேற்றைய தினம் கொரோனாவால் ஒரு உயிரிழப்புக் கூட நிகழாததற்கு காரணம் சென்னையில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 0.7 சதவீதமாக இருப்பதே என கொரோனா குறித்த தனியார் புள்ளி விவர ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்றைய தின நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் ஒரு நாள் எண்ணிக்கை 2,775 ஆனது. தமிழகத்தில் நேற்று மட்டும் 47 பேர் உயிரிழந்துவிட்டனர். இதுவரை தமிழகத்தில் 25,18,786 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் 32,307 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கரூர், மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை.

அதிகரிப்பு
அதிலும் தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வந்த தலைநகர் சென்னையில் நேற்று ஒரு உயிரிழப்பும் ஏற்படாதது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகிறது. இதற்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து இது போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தனியார் ஆய்வாளர்
இதுகுறித்து கோவிட் குறித்த தனியார் ஆய்வாளர் விஜய் ஆனந்த் கூறுகையில் சென்னையில் டெஸ்ட் பாசிட்டிவ் ரேட்டானது 1 சதவீதத்தை காட்டிலும் குறைந்துள்ளது. அதாவது 0.7 சதவீதமாக உள்ளது. இது மிக மிக குறைந்த எண்ணிக்கையாகும். இந்த டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் என்றால் என்னவெனில் 100 பேருக்கு கொரோனா சோதனை செய்தால் அதில் எத்தனை பேருக்கு பாசிட்டிவ் வருகிறது என்பதுதான்.

பரிசோதனை
அந்த வகையில் சென்னையில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் ஒருவருக்குக் கூட பாசிட்டிவ் என வரவில்லை. இதுதான் டிபிஆர் எனப்படும் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் ஆகும். அது போல் தமிழகத்திலும் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டானது 1.95 சதவீதமாக குறைந்துள்ளது.

பலி இல்லை
இதனால் சென்னையில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியும் சென்னையில் கொரோனா உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சென்னையில் இந்த இறப்பு எண்ணிக்கை முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் மே- ஜூன் மாதங்களில் அதிகரித்திருந்தது என்றார் விஜயானந்த்.












Click it and Unblock the Notifications