மேடையில் நடந்தது என்ன? மோடியிடம் ஸ்டாலின் நட்பாக இருந்தது ஏன்? "ரியல்" காரணமே வேறயாம்!
சென்னை: நேற்று நடந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் இருவருமே நெருக்கமாக, நட்பாக இருந்தனர். மேடையில் இவர்கள் நெருக்கமாக இருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வேறு முக்கிய சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு நேற்று சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தவக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் சென்னையில் நடக்க உள்ளது. இன்று மாலை முதல் போட்டிகள் நடக்க உள்ளன.

நெருக்கம்
நேற்று நடந்த இந்த விழாவில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் இருவருமே நெருக்கமாக, நட்பாக இருந்தனர். பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் அவரை மேடையில் பாராட்டி பேசினார். மேடையில் அருகருகே அமர்ந்து இருவரும் நண்பர்கள் போல பேசிக்கொண்டு இருந்தனர். தொடக்கத்தில் இருந்தே மாறி மாறி சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். இவர்கள் இடையிலான அரசியல் வேறுபாடு நேற்று தெரியவில்லை.

சிரிப்பு
அதிலும் பிரதமர் மோடி நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் பல முறை சிரித்து நீண்ட நாள் நண்பர்கள் மீண்டும் பார்ப்பது போல உரையாடினார். ஸ்டாலின் தோள் மீது மோடி தட்டி சிரித்துக்கொண்டு இருந்தார். இரண்டு துருவங்கள் இப்படி ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்து இருந்தது மிகப்பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இப்போதே பலர் பாஜக - திமுக கூட்டணி அமைய போகிறது என்றும் பேச தொடங்கி உள்ளனர். ஏனென்றால் இந்த நிகழ்வை நேற்று காங்கிரஸ் புறக்கணித்தது.

விமர்சனங்கள்
அதேபோல் அதிமுக தலைவர்களை மோடி சந்திக்க மறுத்தார். இந்த தொடர் நிகழ்வுகள் காரணமாக பாஜக - திமுக கூட்டணி அமைய போகிறதோ என்ற கேள்வி எழுந்தது. இணையத்தில் தற்போது இது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் திமுக வட்டாரத்தில் விசாரித்ததில் அவர்கள் வேறு விதமான தகவல்களை தெரிவிக்கின்றனர். அதில், இந்த நிகழ்வு ஒரு சர்வதேச நிகழ்வு. பல நாட்டு வீரர்கள், நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

என்ன காரணம்
அப்படி இருக்கும் போது இதில் அரசியல் பேச கூடாது. தமிழ்நாடு அரசுதான் விழாவை நடத்துகிறது. இருந்தாலும் விழாவை இந்தியா கொண்டு வர ஒன்றிய அரசும் காரணம். அப்படி இருக்கும் நிலையில், நாங்கள் இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேடை நாகரீகம் கருதி இருவரும் ஒன்றாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். சர்வதேச மேடையில் முகத்தை திருப்பிகொண்டா இருக்க முடியும்? என்று கூறுகின்றனர் உடன் பிறப்புகள்.

கூட்டணி இல்லை
மற்றபடி பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை. கொள்கை ரீதியாக நாங்கள் வேறு வேறு கட்சிகள். மேடை நாகரீகம் மட்டுமே இந்த நட்பிற்கு காரணம். நேற்று மேடையில் எல். முருகன்தான் அரசியல் பேசுவது போல பேசினார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேசவில்லை. அரசியல் நாகரீகம், மேடை நாகரீகம் கருதி அவர் தன்மையோடு நடந்து கொண்டார். இது முதல்வரின் பெருந்தன்மை, என்று கூறுகின்றனர் உடன் பிறப்புகள்.

அண்ணாமலை கூட்டணி
நேற்று பேசிய அண்ணாமலையும் திமுக - பாஜக கூட்டணி சாத்தியம் இல்லை என்றுதான் தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் விழாவை சிறப்பாக நடத்தியதற்காக, திமுகவிற்கு, பாஜகவிற்கு தனிப்பட்ட வகையில் நன்றி சொல்கிறது. ஆனால் அதற்காக திமுக பாஜக கூட்டணியா என கேட்டால் இல்லை அதை பற்றிய பேச்சுக்கே இடமில்லை. பாஜக கொள்கை ரீதியாக செல்லக்கூடிய கட்சி. பாஜக ஒரு கொள்கை ரீதியான கட்சி என்பது உங்களுக்கே தெரியும். கொள்கையை நாங்கள் மாற்ற மாட்டோம், என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications