இதென்ன ட்விஸ்ட்டு? அண்ணாவை போற்றிப் புகழ்ந்த அண்ணாமலை.. அதுலயும் ஒருக்கு ‘இக்கு’ வச்சிருக்காரே!
சென்னை: அறிஞர் அண்ணாவை போற்றி வணங்குகிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், "தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர், மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என, மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர், தான் தொடங்கிய கட்சியில் கூட, தனக்குப் பின் தனது வாரிசுகள் வர வேண்டும் என்பதை விரும்பாதவர். திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தொடர்ச்சியாக திமுகவையும், திமுக தலைவர்களையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், திமுகவை நிறுவிய முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவை போற்றுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளது அனைவரின் புருவங்களையும் உயரச் செய்துள்ளது.
அதேசமயம், அண்ணாமலை தனது பதிவில், மறைமுகமாக கருணாநிதி குடும்பத்தினரை விமர்சனமும் செய்துள்ளார். "தான் தொடங்கிய கட்சியில் கூட, தனக்குப் பின் தனது வாரிசுகள் வர வேண்டும் என்பதை விரும்பாதவர் பேரறிஞர் அண்ணா" எனக் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை. கருணாநிதி, அவரைத் தொடர்ந்து முக ஸ்டாலின், அவரைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திமுகவில் ஆதிக்கம் செலுத்தி வருவதை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
அண்ணாமலை கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது, கடந்த 1956ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற அறிஞர் அண்ணா பகுத்தறிவு கருத்துகளை கூறியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கத் தேவர், அறிஞர் அண்ணாவை எச்சரித்ததாகவும், உடனே அண்ணாவும், பிடி ராஜனும் அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியது. அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து அண்ணாவையும் விமர்சித்துவிட்டார் அண்ணாமலை என அதிமுக தலைவர்கள் பொங்கினர். அண்ணா பற்றி அண்ணாமலை பேசிய பேச்சு, பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவை நோக்கி அதிமுகவை தள்ளியது.
இந்நிலையில் தான், அண்ணாவை போற்றிப் புகழ்ந்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அண்ணா பற்றி தவறாகப் பேசியதற்காக அதிமுக - பாஜக கூட்டணி இடையே கடும் மோதல் ஏற்பட்டபோதும், தான் பேசிய வார்த்தைகளில் இருந்து பின்வாங்காமல், மன்னிப்பு கேட்க மாட்டேன் என உறுதியாக இருந்த அண்ணாமலை இன்றைக்கு, அண்ணாவை புகழ்ந்து ட்வீட் போட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாததைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications