"கண்ணே உறுத்துதே".. பிரதமரின் "மணிக்கட்டு" திருகிடுச்சே.. திமுகவிடம் சீறிய சீமான்.. இப்ப கிருஷ்ணசாமி
சென்னை: ஆளுநர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் கிடையாது.. அவர்களும் ஆட்சியின் அங்கம் என்பதை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் ஆளுநர் ஆர்என் ரவி அவர்களின் செயல்பாட்டை ஜீரணித்துக்கொள்ள திமுகவினரால் முடியவில்லை என்று டாக்டர் கிருஷ்ணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் காட்டிய நெருக்கம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
பிரதமரை ஏர்போர்ட்டில் ஸ்டாலின் வரவேற்றபோது, அவரது கையை இறுகப்பற்றி புன்னகைத்து வரவேற்றிருந்தார்.. அந்த இடத்தில், ஆளுநர், மத்திய அமைச்சர்கள், ஓபிஎஸ், எடப்பாடி என பலரும் சூழ்ந்திருந்தாலும், அனைவரையும் விட ஸ்டாலினிடம் அதிக நெருக்கத்தை பிரதமர் காட்டியிருந்தார்..

வணக்கம் சொன்ன உதயநிதி: பின்னர் 'வணக்கம்' சொன்ன, உதயநிதியின் தோளின் மீது கை வைத்து நலம் விசாரித்தார் பிரதமர்.. பிறகு பிரதமர் ஏதோ சொல்லவும், அதைக்கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார் உதயநிதி. திமுக தரப்பு பிரதமருடன் காட்டிய நெருக்கத்தையும், பிரதமர் திமுக தரப்பில் காட்டிய நெருக்கத்தையும், எதிர்க்கட்சிகள் கவனித்தபடியே இருந்தன.. மறுநாளே, இவை அனைத்தும் விமர்சனங்களாக திமுக மீது பாய்ந்து விழுந்தது..
தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று செங்கல்லைத் தூக்கிக் காட்டியவர்கள் பிரதமரிடம் கைகுலுக்கி சிரித்துப் பேசியுள்ளனர், இது தொடர்பாக திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும்" என திரியை கொளுத்தி மாற்றிவீசிவிட்டு போனார். நாம் தமிழர் கட்சி சீமான் ஒரு படிமேலே போய்விட்டார்.. திமுகவின் கள்ளக்காதலிதான் பாஜக என்று ஒரே போடாக போட்டார்..
கள்ளக்காதலி: "திமுக - பாஜகவுக்கும் இடையே திரைமறைவில் தொடர்பு இருக்கிறது, பிரதமர் மோடி சென்னையில் வருகையின்போது அது வெளிப்படையாகவே புரிந்திருக்கும்.. காங்கிரஸை எல்லாருக்கும் தெரிஞ்சு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க.. பிஜேபியை கள்ளக்காதலியா வெச்சிருக்காங்க.. பொண்டாட்டி வீட்டுக்கு கார் போகிறது போல் தெரியும், டபக்குன்னு திரும்பி அப்படியே திரும்பி கள்ளக்காதலி வீட்டுக்கு அந்த கார் போய்விடும்.. அதான் இவங்க.. பார்த்தீங்க இல்ல என்ன நடந்ததுன்னு.. மொத்தமா போய் அங்கே விழுந்துட்டாங்க'' என்று சீமான் விமர்சித்திருந்தார்.

ஆனால், பாஜகவுடன் திமுக காட்டிய அந்த நெருக்கத்தை அதிமுகவால் பகிரங்கமாக விமர்சிக்க முடியவில்லை.. சொந்த கூட்டணி என்பதால், இந்த விஷயத்தை பற்றி அதிமுக பெரிதாக காட்டிக் கொள்ளவுமில்லை.. ஆனால், கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் இதை லேசாக கோடிட்டு காட்டி உள்ளதுடன், ஆன்லைன் விஷயத்தில் காட்டமாகவே திமுகவை விமர்சித்திருக்கிறது.. இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரப்பர் ஸ்டாம்ப்புகளா: அதில், "மாநில ஆளுநர்கள் குறித்து சட்டமன்றங்களில் விமர்சனமோ, விவாதமோ மேற்கொள்ளக்கூடாது என்பது சட்டமன்ற விதி. அந்த விதியை தளர்த்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் விவாதங்களும் திமுக அரசால் வைக்கப்பட்டுள்ளன. 2017 முதல் 2021 வரை 'Go Back Modi' ட்ரெண்ட் செய்து அரசியல் அறுவடை செய்தவர்கள் இப்பொழுது 'Welcome Modi' முழக்கமிட்டு, பிரதமரின் மணிக்கட்டு திருகிப் போகிற அளவிற்கு குடும்ப சகிதமாக திடீர் பாசத்தை பொழிகிறார்கள்.
ஆளுநர்கள் 'வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல', அவர்களும் ஆட்சியின் அங்கம் என்பதை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் மாண்புமிகு ஆளுநர் R.N. ரவி அவர்களின் செயல்பாட்டை ஜீரணித்துக்கொள்ள திமுகவினரால் இயலவில்லை. மோடியை நேரடியாக எதிர்க்கும் துணிவு இல்லாததால் 'ஊருக்கு இழைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்பதற்கு இணங்க ஆளுநரை இலக்காக்கி மோடி எதிர்ப்பாளர்களாக தங்களை சித்தரித்துக் கொள்கிறார்கள்.
இந்திய அரசியல் சாசனம் எவருக்கும் சர்வ அதிகாரத்தை வழங்கவில்லை! எல்லா அதிகார அமைப்புக்களும் 'check and balance' என்ற உயரிய அடிப்படை தத்துவத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன. தமிழக சட்டமன்ற விதிகளை தளர்த்தி ஆளுநருக்கு எதிரான விமர்சனங்களை அனுமதித்தது தவறான முன்னுதாரணமாகும். இதன் மூலம் திமுக வரலாற்று பிழை செய்துள்ளது என்று டாக்டர் கிருஷ்ணசாமி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications