ஜெயலலிதா கூப்பிட்டே அஜித் அரசியலுக்கு வரல.. விஜய்யை ஏன் உதயநிதி சீண்டணும்? வாழ்த்தும் - பரபரப்பும்
சென்னை: உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து சொல்லியிருப்பதையடுத்து, சினிமா களமும், அரசியல் களமும் பரபரத்து காணப்படுகிறது. இது திமுக மற்றும் அஜித் ரசிகர்களிடையே விவாதப்பொருளாகவும் சோஷியல் மீடியாவில் உருவெடுத்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், தன்னுடைய கடினமான உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் முன்னுக்கு வந்தவர்.. நடிப்பையும் தாண்டி வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் ஏன்ற நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறார்.

மேலும், வரும் வருடம் கார் ரேசிங் பந்தயத்திலும் கலந்து கொள்ள போவதாக அறிவித்திருக்கிறார். இதையடுத்து, அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து: சற்று நீண்ட வாழ்த்தாகவே பதிவிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், "விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வேண்டும்" என்று அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று உதயநிதி சொன்னதுமே, ஒருபக்கம் இணையவாசிகளும், மறுபக்கம் அஜித் ரசிகர்களும் இதுகுறித்த கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்..
சலசலப்புகள்: விளையாட்டையும் தாண்டி, அரசியலுக்கான பதிவு போலவும் இந்த வாழ்த்து செய்தி பார்க்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக, விஜய் அரசியலின் மீதான எதிர்ப்பை, அஜீத்துக்கு வாழ்த்து மூலம் உதயநிதி தெரிவிக்கிறாரோ? என்றும் சலசலப்புகள் கிளம்பின. ஆனால், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இதை ஓபனாகவே சொல்லிவிட்டார்.. ''விஜய்யை கோபப்படுத்த, அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை என்று கூறியிருப்பது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.
அப்படியானால், விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டை அஜித் எடுப்பாரா? அஜித்தை வைத்து விஜய்யின் வளர்ச்சியை குறைக்க உதயநிதி முயற்சிக்கிறாரா? என்றெல்லாம் விவாதங்கள் வெடித்து வருகின்றன.
ஜெயலலிதா: எதிர்க்கட்சிகள் இப்படியொரு விஷயத்தை கிளறவிட, அஜித் ரசிகர்களோ இதற்கு தங்கள் கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்..
"எங்கள் தலை சொன்னால் சொன்னதுதான்.. அவருக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அஜித்திடம் அரசியலுக்கு வருவதை பற்றி பேசியிருக்கிறார்.. ஆனால் அஜித்தோ அதை அன்புடன் மறுத்துள்ளார்.. "கடைசி வரை படங்களில் நடித்துக் கொண்டே போயிடுவேன்" என்று ஜெயலலிதாவிற்கு பதில் சொல்லியிருக்கிறார் அஜித். அந்தவகையில், ஜெயலலிதா அரசியலுக்கு அழைத்த சமயத்திலேயே வேண்டாம் என்று மறுத்தவர்.
உதயநிதி: தன்னுடைய சுயநலத்துக்காக, தனது ரசிகர்களை பயன்படுத்தக் கூடாது என ரசிகர் மன்றங்களையே கலைத்தவர். அரசியல் அவர் வரவேண்டும் என்று முடிவெடுத்திருந்தால், என்றைக்கோ வந்திருக்கலாம்.. இப்படி உதயநிதி மூலம் ஒன்றிணைந்துதான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதல்ல.. அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி சென்ற அஜித்தை இழுப்பது நல்லதல்ல'' என தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், திமுகவினரோ, இதையெல்லாம் மறுக்கிறார்கள்.. துணை முதல்வர் வாழ்த்து சொன்னது, அஜித்தின் கார் பந்தய போட்டி விளையாட்டுக்குத்தான்.. விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பதாலும், சக நடிகரான அஜித் விளையாட்டில் அடுத்தடுத்த எல்லைகளை தொட்டு வருவதாலும் அவருக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.. ஆனால், சிலர் இதை வேண்டுமென்றே அரசியல் பதிவாக மாற்றுகிறார்கள்.
விக்கிரவாண்டி: அப்படிப்பார்த்தால், முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய்க்கும், உதயநிதி வாழ்த்துகளும் தெரிவித்திருந்தார். எனவே, அரசியல் வேறு, சினிமா வேறு.. இரண்டையும் குழப்பி கொள்ள முடியாது" என்று பதிலளித்து வருகிறார்கள்.
ஆக, அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து சொல்லியதையடுத்து, எதிர்க்கட்சிகள் பூடகமாக அதை விமர்சிக்க, அஜித் ரசிகர்கள் அதற்கு பதில் அளிக்க, திமுகவினர் மறுத்து விளக்கம் அளிக்க, இப்படி இணையமே பிஸியாக காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications