"அசந்து போயிட்டோம்.. தமிழர்கள் சூப்பர்".. வியந்து போன வெளிநாட்டு செஸ் வீரர்கள்.. ஏன் தெரியுமா?
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு வந்து இருக்கும் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் பலரும் தமிழ்நாடு அரசையும், தமிழர்களையும் பாராட்டி உள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் சென்னையில் நடந்து வருகிறது. இந்தியாவை சேர்ந்த 6 அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றன. நேற்று மகளிர் அணி மட்டும் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தது.
ஆட்டம் தொடங்கி 4 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் தொடர் இப்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய ஆண்கள் பி டீம் இந்த தொடரில் அதிக கவனம் ஈர்த்துள்ளது.

வரவேற்பு வியப்பு
இந்த செஸ் தொடருக்கு வந்து இருந்த வெளிநாட்டு வீரர்கள் முதல் நாளில் இருந்தே தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பாராட்டி வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, அதன்பின் ஹோட்டல் அளிக்கப்பட்டது, அங்கே அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பாராட்டி உள்ளனர். முக்கியமாக,.. எங்களை ஒரு செலிப்ரிட்டி போல நடத்துகிறார்கள். எங்கள் நாட்டில் கூட எங்களை இப்படி நடத்தியது இல்லை என்று பல வீரர், வீராங்கனைகள் பாராட்டி உள்ளனர்.

வரலாற்று விழா
அதோடு தொடக்க விழாவில் அரங்கேற்றப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்த்தும் இவர்கள் அசந்து போய் உள்ளனர். முக்கியமாக நடிகர் கமல்ஹாசன் குரலில் வந்த தமிழர் வரலாறு தொடர்பான ஆவணப்படமும் பலரையும் கவர்ந்து உள்ளது. தமிழர்களின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டோம். இந்த துவக்க விழா இதுவரை நாங்கள் செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் பார்க்காத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இருந்தது. சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர் என்று பாராட்டி உள்ளனர்.

தமிழ் குறித்து கேட்டனர்
இன்னும் பலர் இந்த தொடக்க விழா காரணமாக தமிழர்களின் கலாச்சாரம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். அங்கு இருக்கும் தமிழ்நாடு வீரர்களிடம் சில தமிழ் வார்த்தைகளையும் போட்டி இல்லாத நேரங்களில் இவர்கள் கேட்டு தெரிந்து வருகிறார்கள். அதோடு செஸ் ஒலிம்பியாட் நடக்கும் இடத்தில் சிறப்பான தங்கும் அறைகள், சின்ன சின்ன வசதிகளை கூட சிறப்பாக செய்து கொடுத்தது என்று எங்களை சிறப்பாக கவனித்துக்கொள்கிறார்கள் என்றும் பாராட்டி உள்ளனர்.

உணவு தினமும் புதியது
மொத்தமாக 3000 வகை உணவுகள், அதில் 47 வெளிநாட்டு வகை உணவுகள் கொடுக்கப்படுகிறது. தினமும் ஒவ்வொரு வகையான புதிய உணவுகள் அளிக்கப்படுகின்றன. அதே சமயம் சில நாட்கள் பொங்கல், இட்லி போன்ற உணவுகளும் அளிக்கப்படுகின்றன. இந்த உணவுகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. முக்கியமாக சிக்கன் பிரியாணி. சிக்கன் குழம்பில் சோறு கலந்து சாப்பிடுவது, போன்ற உணவுகள் மிகவும் நன்றாக இருக்கின்றன என்றும் பாராட்டி உள்ளனர்.

அரசு ஏற்பாடு - கவனிப்பு
பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் இந்த தொடருக்கான ஏற்பாடுகளை பாராட்டி உள்ளனர். நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம். என்ன தேவை என்று சொன்னாலும் உடனே எங்களுக்கு அதில் தீர்வுகளை வழங்குகிறார்கள். இவர்களின் விருந்தோம்பல் சூப்பர். நாங்கள் அசரும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்து உள்ளனர் என்று பாராட்டி உள்ளனர். மொத்தமாக இந்த விழா ஏற்பாடுகள் குறித்து எந்த வீரர், வீராங்கனைகளும் இதுவரை குறையே சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications