கடைசியில "இவரையும்" அரசியல்வாதியாக்கிட்டாங்களே! தடம் மாறிய மய்யம்.. கமல் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்?
புதிய வித அரசியலை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் முதல்முறையாக அரசியலில் மய்யம் என்ற கொள்கையில் இருந்து தடம் மாறி மதசார்பாற்ற கூட்டணி ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: மய்யம் என்ற புது அரசியல் கொள்கையுடன் களமிறங்கி கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் முதல்முறையாக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரசின் மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
2018 பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது கமல்ஹாசன் மிகப்பெரிய அளவில் தமிழ்நாடு அரசியல் உலகில் கவனிக்கப்பட்டார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அறிவித்த போது அந்த கட்சிக்கான கொள்கையையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
எங்களின் கொள்கை மய்யம் என்று குறிப்பிட்டார். பொதுவாக கோலிவுட்டிலும், இந்திய சினிமாவிலும் சர்வதேச தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அசத்திய கமல்ஹாசன் அரசியலுக்குள் வரும் போதும் இந்தியாவில் அதுவரை இல்லாத மய்ய கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

மய்ய கொள்கை
அதுவரை அரசியல் கொள்கை என்பதெல்லாம் வலது, இடது, வலது சார்ந்த மையம் , இடது சார்ந்த மையம் என்றே இருந்தது. உதாரணமாக சிபிஎம், சிபிஐ இடதுசாரிகள். பாஜக வலதுசாரிகள். காங்கிரஸ் கொஞ்சம் இடதுசார்ந்த மைய கொள்கை கொண்டது. ஆனால் முழுக்க முழுக்க மையம் என்ற கொள்கை கொண்ட கட்சிகள் தமிழ்நாடு அரசியலிலும், இந்திய அரசியலிலும் இல்லாமல் இருந்தது. கமல்ஹாசன் தொடங்கிய போதுதான் இந்த கொள்கை தேசிய அளவில் கவனம் பெற்றது. நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. 'மக்கள் நீதி மய்யம்' தமிழ்நாடு விழித்தெழட்டும் என்ற ட்விட்டர் பதிவை கட்சி தொடங்கியதும் செய்தார்.

புதிய பாதை
புதிய பாதை, புதிய கொள்கை என்று கூறிவிட்டு அவர் தொடங்கிய கட்சி நாடாளுமன்ற தேர்தலில் 1 வருடத்திலேயே போட்டியிட்டது. அந்த தேர்தலில் 40 இடங்களில் மநீம போட்டியிட 38 இடங்களில் மட்டும் வேட்பாளர் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் 38 இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. அதன்பின் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்பாடு பெரிதும் கவனிக்கப்பட்டது. அந்த தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்றதும் தேர்தல் இன்னும் அதிக கவனம் பெற்றது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 2.6 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. தமிழ்நாடு முழுக்க 1,210,667 வாக்குகளை பெற்று அமமுகவை விட சிறப்பாக செயல்பட்டது. இந்த தேர்தலிலும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் மநீம கூட்டணி வைக்கவில்லை.

கூட்டணி
மய்ய கொள்கை கொண்ட கட்சி என்பதால் இரண்டு தரப்பு பக்கமும் சாயாமல் கமல்ஹாசன் தனியாக ஐஜேகே, சமக போன்ற கட்சிகளுடன் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்டார். அதோடு கோவை தெற்கு தொகுதியில் வானதி பாஜக சார்பாக 53,209 வாக்குகள் எடுக்க கமல்ஹாசன் 51,481 வாக்குகள் பெற்று 33.26 சதவிகித வாக்குகள் எடுத்து கவனம் பெற்றார். வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வி அடைந்தாலும் பெரிய கட்சிகளின் சப்போர்ட் இன்றி அவரின் செயல்பாடு, அவர் எடுத்த வாக்குகள் கவனம் பெற்றது. அந்த தேர்தலுக்கு பின் கமலின் செயல்பாட்டை எதிர்த்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் டாக்டர் மகேந்திரன் உட்பட பலர் கட்சியில் இருந்தே வெளியேறினர். ஆனாலும் கொள்கையில் தடம் புரளாமல் இருக்கிறார் என்று கமல் மீதான ஒரு நம்பிக்கை இருந்தது. கமல் மய்யமாகவே இருக்க போகிறார் என்றுதான் தொடக்கத்தில் கணிப்புகள் இருந்தன.

மநீம கூட்டணி
அதோடு 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளை கடுமையாக விமர்சனமும் செய்து இருந்தார். மய்ய கொள்கை என்று கமல்ஹாசன் கூறிய நிலையில்.. அந்த கொள்கையில் இருந்து தற்போது தடம் புரண்டு அல்லது சில கொள்கை தியாகங்களை செய்து கொண்டு திமுக - காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளார். புதிய வித அரசியலை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் முதல்முறையாக அரசியலில் மய்யம் என்ற கொள்கையில் இருந்து தடம் மாறி மதசார்பாற்ற கூட்டணிக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். ஆம் ஆத்மி போல தனியாக பாஜக, காங்கிரசை எதிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி இருக்கிறார்.

நெருக்கம்
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் இருந்தே திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார். முக்கியமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக கமல்ஹாசன் பழகி வருகிறார். விக்ரம் படத்தை வெளியிட்டது, அதன்பின் கமலின் பல படங்களுடன் ஒப்பந்தம் செய்தது, இந்தியன் 2 படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பிற்குள் வந்தது என்று உதயநிதி - கமல் நெருக்கமாகி உள்ளனர். முக்கியமாக விக்ரம் வெற்றி இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தின் பாடலிலேயே ஒன்றியத்தின் தப்பாலே என்று திமுகவின் ஒன்றிய அஸ்திரத்தை கமல் எடுத்தது அவர் திமுக பக்கம் சாய்கிறாரோ என்ற கேள்வியை உருவாக்கியது. 2021 பிரச்சாரத்தில் திமுக மீது குடும்ப கட்சி என்ற விமர்சனத்தை பட்டும்படாமல் வைத்த அதே கமல்ஹாசன்தான் பின்னர் உதயநிதியுடன் மிகவும் நட்பானார்.

காங்கிரஸ்
இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமானார். கடந்த சில நாட்களுக்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி. எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன். ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும். நான் அந்த வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார். நாட்டிற்காக வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன் என்று கூறிய கமல்ஹாசன் தற்போது காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.

கொள்கை மாற்றம்
மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. கட்சி தலைவர் கமல் தலைமையில், இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கமலஹாசனை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தேச நலன்தான் முக்கியம். தேச நலனுக்காக கட்சியின் எல்லைகளை மீறி செயல்படலாம். தேச நலனுக்காக கட்சியின் எல்லைகளை தாண்டி கமல்ஹாசன் முடிவு எடுக்கலாம். அதுவே இப்போது தேவை என்று கூறப்பட்டது. அதாவது மய்யம் என்ற கொள்கை எல்லையை தாண்டி வலது அல்லது இடதுசாரியுடன் இணையலாம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். அதன்படியே மய்யம் என்பதை தாண்டி காங்கிரஸ் - திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி வைத்துள்ளார். பாஜக என்ற அசாத்திய பலம் கொண்ட கட்சியை எதிர்ப்பதற்காக கமல்ஹாசன் இந்த கொள்கை தியாகத்தை செய்து இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவரின் இந்த திடீர் முடிவை ஒரு பக்கம் சிலர் இதுதான் உங்க "நடு சென்டரா" என்று கேட்டு கடுமையாக விமர்சனம் செய்து வரும். இன்னொரு பக்கம் சிலர்.. பாஜகவிற்கு எதிராக அவர் நிலைப்பாடு எடுத்துள்ளார், அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்று பாராட்டி உள்ளனர். எது எப்படியோ.. முதல்வன் படத்தின் கிளைமேக்சில் வருவது போலத்தான்.. கடைசியில் இவரையும் அரசியலவதியாக்கிட்டாங்களேப்பா!












Click it and Unblock the Notifications