அண்ணாமலை எங்கே? பதறிப்போன போலீஸ்.. ஆட்டோ ஆட்டோவாக தேடினால்.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்!
சென்னை: இன்று தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேரணி சென்ற பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழ்நாடு போலீசார் ஆட்டோ ஆட்டோவாக தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில், மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக இன்று போராட்டம் நடத்தியது. கடந்த மே 21ம் தேதி நாடு முழுக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதேபோல் மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் என்று கூறி பாஜக போராட்டம் நடத்தியது.

போராட்டம்
ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கி பாஜக சார்பாக பேரணி நடத்தப்பட்டது. பாஜக தொண்டர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை வைத்தார். இந்த நிலையில் போராட்டத்திற்கு வந்திருந்த அண்ணாமலை.. ஆட்டோவில் ஏறி கோட்டையை முற்றுகையிட போகிறார் என்ற செய்தி இணையம் முழுக்க பரவியது.

அண்ணாமலை ஆட்டோ
பேரணி சென்ற பாஜகவினர் இடையே அண்ணாமலை இல்லாத காரணத்தால் போலீசார் அவரை தேட தொடங்கினர். அவர் ஆட்டோவில் கோட்டையை நோக்கி செல்லலாம் என்பதால் போலீசார் அந்த வழி முழுக்க குவிக்கப்பட்டனர். அவ்வழி சென்ற ஆட்டோக்களை போலீசார் சோதனை செய்தனர். நேப்பியர் பாலத்தில் மீது சென்ற ஆட்டோ அனைத்தையும் நிறுத்தி போலீசார் தேடினார். ஏதாவது ஆட்டோவில் அண்ணாமலை இருக்கிறாரா என்று சோதனை செய்தனர்.

ஆட்டோவில் சோதனை
பின்னர்தான் அண்ணாமலை ஆட்டோவில் கோட்டைக்கு வரவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இணையத்தில் பரவிய தகவல் பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இன்று போராட்ட களத்திற்கு வந்த அண்ணாமலை, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தன்னுடைய காரை நிறுத்தி இருந்தார். ஆனால் பேரணி முடித்துவிட்டு திரும்புகையில் அங்கு போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது. பாஜகவினர் சாலையில் திரண்டு இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆட்டோவில் சென்றார்
இதன் காரணமாக அண்ணாமலை அங்கிருந்த ஆட்டோவில் ஏறி, தனது கார் இருந்த இடத்திற்கு சென்றார். அங்கிருந்து காரில் கமலாலயத்திற்கு சென்றார். மற்றபடி அவர் கோட்டையை நோக்கி ஆட்டோவில் செல்லவில்லை. ஆனால், அவர் ஆட்டோவில் ஏறி கோட்டையை முற்றுகையிட செல்கிறார் என்ற தவறான தகவல் பரவியது. இதை நம்பித்தான் போலீசார் அண்ணாமலையை ஆட்டோவில் தேடினர்.












Click it and Unblock the Notifications