3 கோணம்.. 30 நிமிடம்.. போனில் பேசிய எடப்பாடி.. உடனே டெல்லி போன வாசன்.. அண்ணாமலை பற்றி கேட்ட மோடி?
எடப்பாடி பழனிச்சாமியும் ஜி.கே.வாசனும் சுமார் 30 நிமிடங்கள் ஃபோனில் பல்வேறு விசயங்களை அலசியுள்ளனர்.
சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக அரசியலில் அமைதியாக இருந்தவரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாசன் மீது மோடிக்கு தனிப்பட்ட பிரியம் உண்டு. அவரை அமைச்சராக்க வேண்டும் என்று கூட விரும்பினார்.
ஜி.கே. வாசனும் மத்திய அமைச்சராக வேண்டும் என்கிற தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதற்கு பாஜகவில் இணைந்து விடுங்கள் என ஜி.கே.வாசனுக்கு சொல்லப்பட்டது. அதனை வாசன் ஏற்காத நிலையில் மத்திய அமைச்சராகும் வாசனின் கனவு நிறைவேறவில்லை.

சந்திப்பு
அதேசமயம், வாசன் கட்சியான த,மா.கா. தொண்டர்களோ, த.மா.கா.வில் வாசனை மட்டுமே மக்களுக்கு தெரிகிறது. இந்த நிலையில் தனி கட்சி நடத்துவது போகாத ஊருக்கு வழி சொல்வது போல. அதனால் கட்சியை பாஜகவில் இணைத்து விட்டு மத்திய அமைச்சரானால் அவரை நம்பி வந்த தொண்டர்களுக்கு நாலு நல்ல விசயங்களை செய்து கொடுக்க முடியும். இதனை வாசன் யோசிக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இடையில்தான் வாசன் தற்போது டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த சந்திப்பில், திமுக ஆட்சி, தமிழக அரசியல், அதிமுக பஞ்சாயத்து என மூன்று கோணங்களில் இருவரும் பேசியிருக்கிறார்கள்.

அரசியல்
இந்த சந்திப்புக்கு முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமியும் ஜி.கே.வாசனும் சுமார் 30 நிமிடங்கள் ஃபோனில் பல்வேறு விசயங்களை அலசியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே பிரதமர் மோடியின் அப்பாயிண்மெண்ட் பெற்று அவரை சந்தித்துள்ளார் வாசன். அந்த சந்திப்பில், ''அண்ணாமலையின் அரசியல் பாஜக-அதிமுக கூட்டணி உறவில் சிக்கலை அதிகப்படுத்துகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய காண்ட்ராவெர்சிகள் தேவையில்லாதது'' என்று அண்ணாமலைக்கு எதிராக பதிவு செய்துள்ளார் வாசன். எடப்பாடியின் அட்வைஸில் இதனை மோடியிடம் வாசன் சொல்லியிருக்கலாம் என்கிறார்கள் த.மா.கா.வினர்.

மோடி
மேலும் மோடியிடம் வாசன் பேசும்போது, ''பாஜக-அதிமுக கூட்டணி நீடிப்பதுதான் பலம். அதிமுகவிற்கான செல்வாக்கு மக்களிடம் குறையவில்லை. இரு கட்சிகளின் தலைவர்களும் ஆளாளுக்கு எதிர்மறை பேட்டிகள் கொடுப்பதுதான் மக்களையும் இரு கட்சிகளின் தொண்டர்களையும் அதிர்ப்தியடைய வைக்கிறது. தலைவர்கள் சரியாக இருந்தால் குழப்பம் வராது'' என்று சொல்லியிருக்கிறார். அப்போது, கூட்டணி பற்றி சில கேள்விகளை மோடி கேட்க, ''அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்க வேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேன். ஆனா, இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொள்வது களத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களிடமும் ஒற்றுமையில்லாமல் போய்விடுகிறது.

ஸ்பெஷல்
இதனாலேயே, வாக்குகள் இடமாற்றம் ஆவதில்லை. அதிமுக-பாஜக கூட்டணி நீடிப்பதால் நிச்சயம் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கூட்டணிக்கு கிடைப்பதில்லை. அதிலும் இப்போது கொஞ்சம் மாறுதல் தெரிய ஆரம்பித்துள்ளது. அதாவது, திமுக மீதும் திமுக அரசு மீதும் கொஞ்சம் கொஞ்சமாக சிறுபான்மையினரிடம் எதிரான மனநிலை உருவாகியுள்ளது. இது ஒருபுறமிருந்தாலும், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அதிமு-பாஜக கூட்டணிக்கு கிடைக்காமல் போவதை ஈடுகட்ட மற்ற சமூக மக்களின் வாக்குகளை கவர ஏதேனும் ஸ்பெசலாக சிந்திக்க வேண்டும்'' என்று தனது கருத்தை சொல்லியிருக்கிறார். அதன்பிறகு திமுக அரசு குறித்த பேச்சு வந்தபோது, ''சட்டம் ஒழுங்கு சரியில்லை ;. எந்த ஒரு அரசு அலுவலகத்துக்கு சாதாரண வேலையாக போனாலும் லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆவதில்லை'' என்று பல விசயங்களை மோடியிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் வாசன்.












Click it and Unblock the Notifications