இக்கட்டான நேரத்தில்.. விட்டுப்போன சண்முக சுந்தரம்.. தடுக்க முயன்ற ஸ்டாலின்? திடீர் ராஜினாமா ஏன்?
சென்னை: அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகள் விசாரணைக்கு வர உள்ள நிலையில்தான் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா கடந்த சில காலமாகவே தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட ஒன்றுதான்.
சொத்து குவிப்பு வழக்குகளில் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் பொன்முடிக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக 76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது.
என்ன வழக்கு?: கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022 ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதேபோல, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே கே எஸ் எஸ் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
பின்னணி: இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, லஞ்சபொழிப்புத் துறையினரின் விளக்கங்களை கேட்காமல் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது அதிகாரிகளை களங்கப்படுத்தியதாகி விடும் எனவும் விசாரணை நடைமுறையில் எந்த தவறும் இல்லை என்றார்.
அதற்கு, வழக்கில் பதிலளிக்க மட்டுமே உத்தரவிடப்படுகிறது என்றும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
மீண்டும் விசாரணை: சூமோட்டோ வழக்குகள் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. தினசரி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, அமைச்சர் பதவியிழந்த பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குகள் பிப்ரவரி மாதம் முழுக்க நடத்தப்பட உள்ளது. இதைதான் ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகள் விசாரணைக்கு வர உள்ள நிலையில்தான் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா கடந்த சில காலமாகவே தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட ஒன்றுதான்.
பேசப்பட்ட ராஜினாமா: அதாவது ஸ்டாலின் இவர் பதவியில் இருக்க வேண்டும் என்று தீவிரமாக ஆசைப்பட்டார். ஆனால் சில முக்கிய வழக்குகளில் இவர் சறுக்கிய விதம் திமுக லீகல் விங்கிற்கே இவரின் மீதான கேள்விகளை எழுப்பியது. இவரின் செயல்பாடு அத்தனை சிறப்பாக இல்லை என்று புகார்களும் சென்றுள்ளது.
ஆனால் பாரம்பரியமாக இவர் திமுகவிற்கு நெருக்கம் என்பதால் இவரை விட்டுக்கொடுக்க ஸ்டாலின் விரும்பவில்லை. இல்லையென்றால் கடந்த வருடமே இவர் மாற்றப்பட்டு இருக்க வேண்டும். சில பள்ளிக்கல்வித்துறை வழக்குகள், லஞ்ச ஒழிப்புத்துறை ஜாமீன் வழக்குகளில் இவரின் வாதங்கள் சரியாக இல்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன.
இப்போது அமைச்சர்கள் வழக்கில்.. அமைச்சர்களுக்கு எதிராக அரசு தரப்பாக இவர்தான் ஆஜராக வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது சண்முக சுந்தரம் ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications