நீங்க சொன்னது தண்ணீரில் எழுதுனதா? அண்ணாமலையை பற்றி அமித் ஷாவிடம் அதிமுக புகார்? என்ன நடந்தது?
சென்னை: நேற்று அதிமுக எம்பி தம்பிதுரை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதில் அண்ணாமலையின் பேச்சுக்கள் குறித்து அவர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை பேசும் கருத்துக்கள் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. சமீபத்தில் பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.
அமித் ஷா பதிலடி
இந்த நிலையில்தான் அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக பாஜக தலைவர் அமித் ஷா பேசி இருந்தார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட நிலையில்தான் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து அமித் கருத்தை கொஞ்சம் மறுதலிக்கும் விதமாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் எங்கேயும் கூறவில்லை. அமித்ஷா கூறியதை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதாக என்பதற்கு ‛இருக்கிறது' என்று தான் அமித்ஷா கூறினார். நான் அமித் ஷாவுடன் இரண்டு மணி நேரம் பேசினேன். அதில் பல விஷயங்களை பேசினோம். அதை எல்லாம் இங்கே சொல்ல முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. இதுதான் நடக்கும் என்று எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கூட்டணி விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்பதை கூற இயலாது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. அரசியலில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று கூறினார். அமித் ஷா கருத்தையே அண்ணாமலையோ மறுத்து பேசுவது போல பேசியது பெரிய சர்ச்சையானது. ஏன் இவர் இப்படி சொல்கிறார்.. டெல்லி மீது இவருக்கு பயம் இல்லையா? இல்லை டெல்லியின் முழு சப்போர்ட்டோடு பேசுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
தம்பிதுரை சந்திப்பு

இதற்கு பதில் அளித்த எடப்பாடி பாஜகவின் கூட்டணியை மாநிலத்தில் உள்ளவர்கள் உறுதி செய்ய மாட்டார்கள். பாஜகவில் பொதுவாக இதை மத்தியில் இருப்பவர்கள்ய்தான் உறுதி செய்வார்கள். மாநிலத்தில் இருப்பவர்கள் இதில் எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள் என்று கூறினார்.
இந்த நிலையில் நேற்று அதிமுக எம்பி தம்பிதுரை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதில் அண்ணாமலையின் பேச்சுக்கள் குறித்து அவர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி... நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லிவிட்டீர்கள். எங்கள் பொதுச்செயலாளரும் இதையே கூறிவிட்டார். ஆனால் மாநில தலைவர் இப்போதும் முரண்டு பிடிக்கிறார். அவரின் பேச்சுக்களால் அதிமுக தொண்டர்கள் அப்செட் ஆகிறார்கள். இப்படி பேசினால் பாஜகவிற்காக தொண்டர்கள் வேலை பார்க்க மாட்டார்கள். நாம் ஒன்று சேர்ந்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க மாட்டார்கள்.
அண்ணாமலை பேச்சுக்களை மறக்க மாட்டார்கள். கூட்டணி பற்றி தேசிய தலைமை தானே உங்கள் கட்சியில் முடிவுஎடுக்கும். ஆனால் ஏன் அண்ணாமலை தொடர்ந்து இதில் கருத்து தெரிவித்துக்கொண்டு இருக்கிறார். இப்படி செய்தால், அவரிடம் எப்படி நாங்கள் நெருக்கமாக இருக்க முடியும். தமிழ்நாட்டில் அதிமுக எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே தெரியும். அப்படி இருக்கும் போது அண்ணாமலை மட்டும் ஏன் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்.
அரசியலில் உறுதியான வாக்குறுதியை விட தண்ணீரில் பேசிய வார்த்தைகள்தான் அதிகம் என்கிறார் அண்ணாமலை. அதன் அர்த்தம் என்ன? நீங்கள் பேசியது அப்படி என்று சொல்கிறாரா'? என்று அதிமுக தலைமையின் கருத்துக்களை தம்பிதுரை அமித் ஷாவிடம் பாஸ் செய்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications