2021ல் நடந்த அந்த சம்பவம்.. விஜய் தைரியமாக அரசியலுக்கு வரலாம் என முடிவெடுக்க காரணம்!
சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக ரசிகர்கள் பெற்ற வெற்றி தான், விஜய் தைரியமாக அரசியலுக்கு வர முடிவெடுக்க காரணம் என்று கூறப்படுகிறது. விஜய் அரசியல் பாதைக்கு வழிவகுந்த அந்த தேர்தலை பற்றி பார்ப்போம்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது பல காலமாக தமிழ்நாட்டில் இருக்கிறது. நடிகர் எம்ஜிஆரில் ஆரம்பித்து, சிவாஜி கணேசன், ஜெயலலிதா, டி ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் வரை பலரும் அரசியலுக்கு வந்துள்ளனர்.இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா தவிர யாரும் தமிழகத்தில் முதல்வராகவில்லை.. அதேநேரம் விஜயகாந்த் மிகப்பெரிய அளவில் அரசியலில் உருவெடுத்தார். தனித்து போட்டியிட்ட வரை பெரும் சக்தியாக வளர்ந்த விஜயகாந்த், அதிமுக உடன் 2011ல் கூட்டணி வைத்த பிறகு எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தாலும், அதுவே பின்னாளில் வீழ்ச்சிக்கு காரணமாக மாறியது. கமல்ஹாசனை பொறுத்தவரை கணிசமாக வாக்குகள் 2021 தேர்தலில் பெற்றாலும் வெற்றி பெறவில்லை. இப்போது திமுக உடன் கூட்டணியில் இணைய போவது தெரிகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள விஜய் அரசியலில் இறங்கி உள்ளார். 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் ரசிகர்கள் படையுடன் களம் இறங்கி உள்ள விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் இன்று அரசியல் கட்சிய பதிவு செய்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து களம் இறங்கி உள்ளதாக அறிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு 2021ம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வெறுமனே ரசிகர்களாக மட்டும் களமிறங்காமல் தேடித்தேடி பல்வேறு சுயேச்சை வேட்பாளர்களை இணைத்து கணிசமான வெற்றியினை விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்றர். இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள், 12 ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் உள்ளிட்ட 129 பேர் வெற்றி பெற்றனர்.
குறிப்பாக சொல்வது என்றால், புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ் வெற்றி பெற்றார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3ஆவது வார்டில் போட்டியிட்ட மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட்ட வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
திருச்சி மாவட்டத்தில் பூவாலூர் பேரூராட்சி 15 ஆவது வார்டில் போட்டியிட்ட V.மேனகா, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது கவுஸ் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். இப்படி நகர்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சென்னையின் ஒரு வார்டில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தையும் பெற்று இருந்தது விஜய் மக்கள் இயக்கம். சென்னை மாநகராட்சியின் 136ஆவது வார்டில் இரண்டாம் இடம் பெற்ற அறிவுச்செல்வி விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஆவார்.எந்த பிரச்சாரமும் இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற வெற்றியால் விஜய் உற்சாகமானார்.
அதன்பின்னரே உறுதியுடன் அரசியல் கட்சியாக தனது மக்கள் இயக்கத்தை மாற்ற முடிவு செய்தார் விஜய், அதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம், ஐடி விங் நிர்வாகிகள் நியமனம், வழக்கறிஞர் அணி, மகளிர் அணி என ஒவ்வொரு அணியாக உருவாக்கினார்.. அதன்பின்னர் அடிக்கடி நிர்வாகிகளை சந்தித்து நலதிட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார். இறுதியாக தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளார்.
விஜய் அரசியலில் ஏற்படுத்த போகும் தாக்கம் என்பது இனிமேல் தான் தெரியும். விஜய் மக்கள் இயக்கத்தில் விஜய் தவிர அனைவருமே அரசியலுக்கு புதியவர்கள் ஆவர். அவர்கள் இயக்கத்தில் இனிமேல்தான் இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாவார்கள் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் கட்சியின் கொள்கை (சித்தாந்தம்) என்ன என்பது குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் விரைவில் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications