விஜய் கட்சி தொடங்கியது ஏன்? புதிய விளக்கம் சொன்ன தவெக முக்கிய புள்ளி!
சென்னை: விஜய் திடீரென்று கட்சித் தொடங்கியதற்கு என்ன காரணம்? அதன் பின்னணியில் என்ன அழுத்தம் இருக்கிறது என்பது பற்றி தவெக செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விஜய் கட்சிக்கு எத்தனைச் சதவீதம் வாக்கு வங்கி இருக்கிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் முறைப்படி கட்சியே பதிவு இன்னும் செய்யப்படவில்லை. கட்சியின் பெயரைப் பதிவு செய்வதற்காக மனு அளித்துவிட்டு, முடிவுக்காகக் காத்திருக்கிறது விஜய் தரப்பு. விஜய் மாவட்டம் தோறும் நிர்வாகிகளைப் போட்டு, அதை முறைப்படுத்தி கட்சியை நிர்வகித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இதற்கு நடுவே சீமான் வேறு விஜய்யை தன் பக்கம் இழுத்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டில் ஆதரவான அரசியல் கட்சிகள் இல்லை. இதுவரை தன்னந்தனியாகவே அவர் அரசியல் செய்து வந்தார். ஆனால், கடந்த காலங்களில் அவர் அதிமுகவுக்கு நேரடியாக தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதை அவரே இப்போது நினைவுகூர்ந்து பேசத் தொடங்கியுள்ளார்.
இதே மாதிரி விஜய்க்கும் அதிமுக ஆதரவு நிலைப்பாடு கடந்த காலங்களிலிருந்துள்ளது. அவர் நேரடியாக தனது ரசிகர் மன்றங்களை அதிமுகவுக்காகத் தேர்தல் பணிகளைச் செய்யச் சொல்லி அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாகச் சந்தித்து விஜய்யும் அவரது அப்பா எஸ்.ஏ.சியும் ஆதரவு கொடுத்துள்ளனர். கடந்த கால விசயங்களை அலசி ஆராயும் போது விஜய் திமுகவுக்கு எப்போதும் ஆதரவு அளித்ததைப் போல தெரியவில்லை. மு.கருணாநிதியைச் சந்தித்து விஜய்யோ அவரது அப்பாவோ ஆதரவு கொடுத்ததும் இல்லை.
இப்போது கூட உதயநிதியை திமுக முன்னிறுத்துவதால்தான், விஜய் அரசியலுக்கே வருகிறார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அதில் உண்மையில்லாமல் இல்லை. சினிமா துறையில் விஜய் நடித்த 'குருவி’ படத்தின் மூலம்தான் உதய் அடியெடுத்து வைத்தார். அதன்பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அதைப் பொதுவெளியில் உதயநிதியே பேசி இருக்கிறார்.
இடையிலிருந்தவர்கள் சிலர் தவறான தகவல்களைக் கூறி, இருவருக்குள் ஒரு மனக்கசப்பை உண்டாக்கி விட்டனர் என்று சொல்லி இருக்கிறார். அப்படியான சூழ்நிலையில்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மவுனமாக இருந்த விஜய், திடீரென்று உதயநிதியின் அரசியல் வருகைக்குப் பிறகு வேகம் எடுக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் விஜய் கட்சித் தொடங்கியதற்கு என்ன காரணம்? அதற்கான அவசியம் என்ன? என்பது பற்றி தவெக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இது பற்றி அவர், “ஆளும் கட்சி மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி சம்பவம் அதற்கான வாசலை திறந்துவிட்டுள்ளது. எனவே புதியவற்றை மக்கள் அனைவரும் தேடித் தொடங்கிவிட்டோம் என்பதே உண்மை. அதற்கான முடிவுகள் 2026 தேர்தலில் களத்தில் எப்படிப் பிரதிபலிக்கும் என்பதை இப்போதே பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். முன்பே தவெகவின் இலக்கு 2026தான் என்பதைச் சொல்லிவிட்டோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்பதையும் தெளிவுபடுத்திவிட்டோம்.
இப்போதே உங்கள் கொள்கை என்ன? சின்னம் என்ன? முழக்கம் என்ன? என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு எல்லாம் பதில் எப்போது கிடைக்கும் என்றால், முதலில் தேர்தல் ஆணையத்தில் கட்சி முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அதற்கான அனுமதி எங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு மிகப் பிரம்மாண்டமாக ஒரு மக்கள் சந்திப்பை விஜய் நடத்துவார். அது பெரிய மாநாடாகக் கண்டிப்பாக நடைபெறும். அதில், எங்கள் கொள்கைகள் உட்பட அனைத்தையும் விஜய் தெளிவுபடுத்துவார்.
முன்பே நாங்கள் எந்தப் பாதையில் கட்சி பயணிக்கப் போகிறது என்பதை விஜய் விளக்கி இருக்கிறார். பிளவுபடுத்தும் அரசியல் இருக்கக் கூடாது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் கட்சியாக தவெக செயல்படும். லட்ச ஊழல்களை ஒழிக்கப்பட என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதைத்தாண்டி தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து தவெக ஒரு நிலைப்பாட்டைச் சொல்லவேண்டும். அது எங்களின் கடமை. அதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. முதலில் எங்கள் நிர்வாகிகளை நாங்கள் மாவட்டம் தோறும் போட வேண்டும். அந்த வேலையைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். பல மாவட்டங்களில் எங்களின் அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது.
விஜய் முன்பே தனது ரசிகர் மன்றம் மூலமாகப் பல சமூக சேவைகளைச் செய்துவருகிறார். ஆனால், அது போதுமானதாக இல்லை. மேலும் மக்களுக்கு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். ஆகவே அதை நோக்கித்தான் நாங்கள் நகர்கிறோம். தவெக யாருக்கும் மாற்றாக வரவில்லை. மக்கள் ஆதரவுடன் நாங்கள் முதன்மை சக்தியாக வரவே விரும்புகிறோம்.
முன்பே விஜய் தனக்கு அரசியல் என்பது ஒரு பொழுதுபோக்கு அல்ல. அதேபோல தொழிலும் அல்ல என்பதை விளக்கிவிட்டார். விஜய்யிடம் மிகப்பெரிய வியாபாரம் கைவசம் உள்ளது. அதைவிட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார். அவரிடம் ஏற்கெனவே ரசிகர் மன்ற கட்டமைப்பு இருக்கிறது. புதியதாக எதையும் உருவாக்கத் தேவையில்லை. அவர் இருக்கின்ற அமைப்பை மேலும் வலுப்படுத்திப் பொறுப்பு வழங்கப்பட்டாலே போதும். அதைத்தான் செய்துவருகிறார். எனக்கு முன் சவால் அதிகம் உள்ளது. அதையும் விஜய் உணர்ந்திருக்கிறார். சமாளிப்பதற்குத் தயாராகவும் அவர் இருக்கிறார்” என்றவரிடம் 'தம்பி விஜய் அண்ணனான என்னை தேடி வரவேண்டும்’ என்று கூறியுள்ளார் சீமான். அந்த அழைப்பை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? எனக் கேட்டதற்கு, “அவர் மூத்தவர்தான். அவரது ஆதரவை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே வரவேற்றுத்தான் வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications