வேக வேகமாக.. ஆளுநரிடம் எடப்பாடி தந்த ரிப்போர்ட்.. "ஆபத்து... ஆபத்து".. ஸ்டாலின் ஏன் அப்படி சொன்னாரு?
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்பிற்கும் - ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பிற்கும் நீட் தேர்வில் தொடங்கிய மோதல் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவில் வந்து நிற்கிறது.
எதிர்க்கட்சிகளும் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து.. திமுகவிற்கு எதிராக புகார்களை அடுக்கி வருகிறது. அந்த வகையில்தான் சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்தார்.
ஓபிஎஸ்க்கு திறக்கும் 'ராயப்பேட்டை’ கதவு! சற்றே யோசிக்கும் எடப்பாடி டீம்! ரூட்டை மாற்றும் தேனி!
பட்டியல்
இந்த மீட்டிங்கில் திமுக பற்றி குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை. கோவை கார் வெடிப்பில் சரியாக விசாரணை நடத்தவில்லை. சென்னையில் வழிப்பறி பிரச்சனை அதிகம் ஆகிவிட்டது. போலீசார் சுதந்திரமாக செயல்படுவது இல்லை. போலீசார் எதிர்கட்சிகளை மட்டுமே கைது செய்கிறார்கள். மற்றபடி குற்றவாளிகள் சுதந்திரமாக திரிகிறார்கள் என்று எடப்பாடி ஆளுநர் ஆர். என் ரவியிடம் பேசி இருக்கிறாராம். அதே சமயம் ஆளுனரிடம் வேறு ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டு இருக்கிறாராம். அதன்படி, திமுக உங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. உங்களுக்கு எதிராக டெல்லியில் புகார் கொடுக்கிறது. நீங்கள் திமுகவிற்கு நெருக்கடி கொடுங்கள். திமுக அமைச்சர்களுக்கு எதிராக உள்ள புகார்களை பற்றி அதிகாரிகளிடம் விசாரியுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்பட்டது.
அண்ணாமலை
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ரிப்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த ரிப்போர்ட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பான புகார்கள் இருந்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து உள்ளார்.தமிழ்நாடு சட்ட ஒழுங்கு குறித்து அண்ணாமலை புகார் கொடுத்ததாக என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போது சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. சட்ட ஒழுங்கில் குறைபாடு இருப்பதாக அண்ணாமலை ரிப்போர்ட் ஒன்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பல்வேறு மசோதாக்கள் பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. முன்னதாக கோயம்புத்தூரில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த சம்பவத்தில் முபின் என்ற தீவிரவாதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். இதில் போலீஸ் சரியாக செயல்படவில்லை என்றும் இவர் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இரண்டு பேர்
இந்த இரண்டு பேருமே முக்கியமாக வைத்த குற்றச்சாட்டுகள் என்று பார்த்தால் அது சட்ட ஒழுங்குதான். பெரிதாக கொலை, கொள்ளை எதுவும் நடக்காத நிலையிலும். கோவை கார் வெடிப்பில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையிலும் இவர்கள் இருவரும் சட்ட ஒழுங்கு பற்றி புகார் அளித்து உள்ளனர். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இவர்களுக்கும், ஆளுநருக்கும் சேர்த்தே நேற்று பதிலடி கொடுத்தார். நேற்று அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், அதிமுக 10 வருடங்களில் தமிழ்நாட்டை பாழ் செய்துவிட்டது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டை மீட்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கான பணிகளை செய்து வருகிறோம்.
மீட்டு வருகிறோம்
தமிழ்நாட்டை வேகமாக மீட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் முதலீடு அதிகரித்து உள்ளது. தமிழ்நாடுதான் வேண்டும் என்று கூறி வெளிநாட்டு நிறுவனங்கள் பல முதலீடு செய்ய வருகின்றன. இதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடக்கிறது என்று அர்த்தம். ஏற்றுமதியிலும் நாம்தான் முன்னிலையில் இருக்கிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. இவர்கள் எப்படி சட்ட ஒழுங்கு பற்றி பேசலாம்.
ஆட்சி
ஒரு ஆட்சி எப்படி எல்லாம் இருக்க கூடாது.. ஒரு முதல்வர் எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாக இருந்ததுதான் அதிமுகவின் இருந்த கால ஆட்சி. அதிகாரத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த கும்பல் அது. பத்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அவர்கள் இருண்ட மாநிலமாக மாற்றிவிட்டனர். அவர்கள் ஆட்சியில் நடந்த அவலத்தை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்களா? உங்கள் யோக்கிதைதான் எங்களுக்குத் தெரியுமே என்று மக்களே அவர்களை பார்த்து கிண்டலாக இருக்கும் அளவிற்குத்தான் அவர்களின் நிலைமை இருக்கிறது. நம் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
சட்ட ஒழுங்கு
சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று சதி செய்கிறார்கள். மக்களுக்கு ஆபத்தே இல்லை. நல்ல ஆட்சி நடக்கிறது. ஆனால் இவர்கள் ஆபத்து.. ஆபத்து என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களை காக்கும் ஆட்சிதான் இங்கே இருக்கிறதே. சட்ட ஒழுங்கு கெடவில்லையே.. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை கெடுக்க வேண்டுமே என்று சிலர் தீவிரமாக சதி செய்கிறார்கள். தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்ற கோபம் அவர்களுக்கு இருக்கிறது. விமர்சனங்களை வரவேற்கலாம். ஆனால் விஷமத்தனம் இருக்க கூடாது. விமர்சனம் செய்யவும் ஒரு அருகதை வேண்டும். நீங்கள் எல்லாம் உலக மகா உத்தமரை போலபேசலாமா? என்று முதல்வர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கு பற்றி பேசி உள்ளார்.