ஆர்.பி.உதயக்குமாரின் "ரைட் ஹேண்ட்".. ஓபிஎஸ் அணிக்கு போன ஐயப்பன்.. காரணமே வேறயாம்! வெலவெலத்த எடப்பாடி
சென்னை: அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் நேற்று திடீரென ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்தது அதிமுக வட்டாரத்தில் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடக்க தொடங்கி உள்ளன. அதிமுகவில் இருந்து எடப்பாடி அணி ஓ பன்னீர்செல்வம் சமீபத்தில் நீக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
முக்குலத்தோர் இடையே இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முக்குலத்தோர்களை அதிமுக ஓரம் காட்டுவதாக பெரிய விவாதம் எழுந்தது.
இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர். பி உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி அணி அறிவித்தது.

ஓ பன்னீர்செல்வம்
தென் மாவட்டங்களில் ஓ பன்னீர்செல்வத்திற்கு போட்டியாக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஆர்.பி உதயகுமாரை வளர்த்துவிட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக அரசியல் யூகங்கள் தெரிவித்தன. முக்குலத்தோர் ஆதரவை பெறவும், தென் மண்டலத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு உள்ள ஆதரவை காலி செய்து ஆர் .பி உதயகுமாரை மேலும் வளர்த்து விடவும் எடப்பாடி பழனிசாமி முயல்வதாக கூறப்பட்டது. இதற்கான பணிகளை எடப்பாடி செய்து வந்த போதுதான் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் பக்கம் ஒவ்வொரு நிர்வாகிகளாக தாவி வருகின்றனர். தென் மண்டல நிர்வாகிகள், சேலம் நிர்வாகிகள், பல்வேறு பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு தாவி வருகின்றனர். சமீபத்தில் அதிமுக எம்பி தர்மர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இப்போது ஆர்.பி உதயகுமாருக்கு நெருக்கமானவர் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுள்ளார்.

ஆர் பி உதயகுமார்
ஆர். பி உதயகுமாருக்கு நெருக்கமான எம்எல்ஏ ஐயப்பன் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்து உள்ளார். எடப்பாடி எந்த ஆர்பி உதயகுமாரை வளர்த்துவிட நினைத்தாரோ அதே ஆர்பி உதயகுமார் கேம்பில் தற்போது விரிசல் விழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.பி உதயகுமாருக்கு லெப்ட் ஹேண்ட் போல இருந்தவர் ஐயப்பன். அவர் எப்படி ஓ பன்னீர்செல்வம் அணிக்கு திடீரென தாவினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மோதல் சமாதானம்
ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் வரும் போதெல்லாம் ஆர்பி உதயகுமார், ஐயப்பன் ஆகியோர்தான் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆலோசனை செய்வார்கள். சமாதானம் செய்வார்கள். இப்போது அந்த ஐயப்பன்தான் எடப்பாடி அணியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் அணிக்கு தாவி உள்ளார். எடப்பாடி தரப்பை இந்த சம்பவம் அதிர வைத்துள்ளது. இது இன்னொரு மாதிரியான விவாதத்தையும் எழுப்பி உள்ளது. அதன்படி ஐயப்பன் கண்டிப்பாக ஆர்பி உதயகுமாருக்கு எதிராக செயல்பட மாட்டார்.

ஐயப்பன்
ஏனென்றால் கடந்த தேர்தலில் ஐயப்பன் எம்எல்ஏ ஆகவே உதயகுமாரின் தேர்தல் யுக்திகள்தான் காரணம். அப்படி இருக்கும் போது ஐயப்பன் உதயகுமாருக்கு எதிராக செயல்பட மாட்டார். இதனால் ஐயப்பன் ஆர்.பி உதயகுமாரின் ஆசியோடுதான் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு சென்றாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்ட ரீதியாக ஓ பன்னீர்செல்வம் ஹேண்ட் வலுவாக இருப்பதால்.. அவர் பக்கம் தனது ஆளை அனுப்பி ஆர்.பி உதயகுமார் தூது விடுகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த திடீரென மாற்றம் காரணமாக ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications