"சுயமரியாதை".. அமித் ஷாவை பார்த்தே ஆகணுமா? அடித்து சொன்ன எடப்பாடி.. செம சேஞ்ச்! பின்னணியில் 2 காரணம்
சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தால் அவரை பார்த்தே ஆக வேண்டுமா என்று எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்வி தமிழ்நாடு அரசியலை உலுக்கி உள்ளது. எடப்பாடி பழனிசாமியா இப்படி பேசினார் வியப்பாக இருக்கிறதே என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அமைந்து உள்ளது.
அவரின் இந்த பேச்சுக்கு பின் 2 முக்கியமான காரணங்கள் இருப்பதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த இரண்டு காரணங்கள் என்னென்ன? எடப்பாடி ஏன் திடீரென இப்படி பேச வேண்டும்?
ஜெயலலிதாவின் மறைவில் இருந்தே அதிமுகவில் முக்கியமான முடிவை எடுப்பதில் பாஜக முக்கிய பங்கு வகித்து வந்தது. அதிமுகவில் முக்கிய பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் அதில் மத்தியசம் பேசுவதில் டெல்லி பாஜகதான் முக்கிய பங்கு வகித்தது.

முக்கிய பங்கு
முக்கியமாக எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் மோதிய போது அவர்களை சேர்த்து வைத்ததே மோடிதான் என்றும் கூறப்பட்டது. மோடிதான் எங்களை சேர்த்து வைத்தார் என்று பன்னீர்செல்வமும் வெளிப்படையாக பல இடங்களில் பேசி இருக்கிறார். அதேபோல் அதிமுகவில் மோதல்கள் நடக்கும் போதெல்லாம் அமித் ஷாவும் அதை தீர்த்து வைத்து உள்ளார். அந்த அளவிற்கு அதிமுகவில் பாஜக தனது லகானை இறுக்கமாக பிடித்து இருந்தது.

லகான்
அதோடு டெல்லியில் அமித் ஷாவை பார்க்க அதிமுக தலைவர்களும் தீவிரமாக முயன்று வந்தனர். சமீபத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான புகார் பட்டியலை அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வாசித்தார். அந்த அளவிற்கு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான நபராக இருந்தார். இந்த நிலையில்தான் நேற்று எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திப்பது தொடர்பாக திடீரென பேசினார்.

அமித் ஷா
அதில், அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

ஏன் இப்படி?
கடந்த சனிக்கிழமை அமித் ஷா தமிழ்நாடு வந்தார். சென்னை வந்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. ஓ பன்னீர்செல்வம் சென்று சந்தித்த போது எடப்பாடி பழனிசாமி மட்டும் அமித் ஷாவை சென்று சந்திக்கவில்லை. இதுதான் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பெரிதாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திப்பதை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அவரின் பேச்சுக்கு பின் இரண்டு முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம் 1
அதன்படி அதிமுக என்பது தமிழ்நாட்டில் பெரிய கட்சி. பாஜகவை விட பல மடங்கு அதிக வாக்கு கொண்ட கட்சி. அப்படி இருக்கும் போது பாஜகவிடம் அதிமுக தலைவர்கள் அடங்கி செல்வதை அதிமுக தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். பாஜகவை துணிச்சலாக எதிர்க்கும் தலைவர்களைத்தான் தொண்டர்கள் விரும்புவார்கள். சுயமரியாதையோடு இருக்கும் தலைவர்களைத்தான் தொண்டர்கள் விரும்புவார்கள். இதனால்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி துணிச்சலாக பேசி இருக்கிறார் என்கிறார்கள்.

காரணம் 2
இரண்டாவது விஷயம் காங்கிரஸ் கட்சியோடு எடப்பாடி பழனிசாமி நெருங்கி வருகிறார். இதனால் பாஜகவின் தயவு எங்களுக்கு தேவை இல்லை. எங்களின் தயவுதான் உங்களுக்குத் தேவை என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அமித் ஷாவே இருந்தாலும் அவர் வரும் போதெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஏனென்றால் நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்று எடப்பாடி பழனிசாமி அடித்து சொல்லி இருக்கிறார். கூட்டணியில் பாஜகவை தட்டி வைக்கும் பேச்சு இது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!












Click it and Unblock the Notifications