"ஆக்சன்".. ஸ்டாலின் கிட்ட கேளுங்க.. கோடநாடு கேஸில் மூக்கை நுழைத்த சசிகலா! எடப்பாடிக்கு எகிறிய பிரஷர்
சென்னை: கோடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சசிகலா தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில்தான் சசிகலா இதில் புதிய குண்டு ஒன்றை போட்டுள்ளார்.
அதிமுகவில் பல்வேறு களேபரங்கள் நடக்கும் நிலையில் சசிகலா புரட்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வடமாவட்டங்களை மட்டும் குறி வைத்து அவர் இந்த புரட்சி பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.
தென் மாவட்டங்களில் ஏற்கனவே முக்குலத்தோர் ஆதரவு அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் பிரச்சனை நிலவும் நேரத்தில், வடமாவட்டங்களுக்கு சென்று அங்கு நிர்வாகிகளை சந்திக்கும் திட்டத்தில் சசிகலா இருக்கிறாராம்.

திண்டிவனம்
அதன்படி சசிகலா தற்போது திண்டிவனத்திற்கு சென்றுள்ளார். நேற்று அவர் மரக்காணத்தில் அதிமுக தொண்டர்களை சந்தித்து பேசினார். அதிமுக நிர்வாகிகள் பலரை சந்தித்த சசிகலா, அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை துண்டாடி வருகிறார்கள். அதிமுகவை பார்த்து திமுக கட்சிகள் ஒரு காலத்தில் பொறாமைப்பட்டது. அவ்வளவு ஒழுங்கோடு கட்சி இருந்தது.

மோதல்
ஆனால் பாருங்கள் இப்போது மோதல் உச்சத்தில் இருக்கிறது. அதிமுக சின்னத்தை முடக்கும் அளவிற்கு இவர்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். அதிமுக சின்னத்தை முடக்க இவர்கள் யார். அதிமுக மோதலை பார்த்து திமுக ரசித்துக்கொண்டு இருக்கிறது. திமுக இப்போது ஆனந்த கொண்டாட்டத்தில் இருக்கிறது. அதிமுக என்ன தனிப்பட்ட வீடா? அது தனி நபரின் சொத்தா?

உரிமை
அதற்கு எப்படி ஒருவர் உரிமை கொண்டாட முடியும். ஒரு அரசாங்கத்தை நடத்த கூடிய கட்சி அதிமுக. அதை ஒருவர் உரிமை கொண்டாட கூடாது. மக்கள் ஆதரவு இருப்பவரே அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும். ஜெயலலிதா போல மக்களுக்காக உழைக்கும், மக்களுக்காக பணிகளை செய்யும் தலைவர்தான் பொதுச்செயலாளர் ஆக வேண்டும்.

கோடநாடு
கோடநாடு வழக்கில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னிடம் இது தொடர்பாக விசாரணை செய்தனர். நான் இரண்டு நாட்கள் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்தேன். போலீஸ் பல கேள்விகளை கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் முறையாக பதில் அளித்தேன். ஏன் இன்னும் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசு
அரசு இதில் விரைந்து முடிவுகளை எடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதி இது. கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கண்டிப்பாக கண்டுபிடிப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அவர் ஏன் இன்னும் ஆக்சன் எடுக்கவில்லை. அவரிடம் கேட்க வேண்டும், என்று சசிகலா கோடநாடு வழக்கு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

கோடநாடு வழக்கு
எடப்பாடி சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த கோடநாடு வழக்கில் விசாரணை சூடு பிடித்துள்ளது. இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

விசாரணை அடுத்த கட்டம்
வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் அளித்ததாக வெளியாகும் செய்திகள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வழக்கில் விசாரணை அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. வெளி மாநிலங்களுக்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி முயன்று வரும் நிலையில், கோடநாடு வழக்கில் அரசு தீவிரம் காட்டி வருவது, இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க சசிகலா கோரிக்கை வைத்து இருப்பதும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications