'அதை' பத்தி வாயே திறக்கக்கூடாது! அதிமுக எம்எல்ஏக்களுக்கு பறந்த உத்தரவு! எடப்பாடி ரொம்பவே ஸ்ட்ரிக்ட்
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் எடப்பாடி முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் எப்படி குழப்பம் ஏற்பட்டதோ, அதேபோல இப்போது மீண்டும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. கட்சி இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது.
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இருவருமே, தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் தொண்டர்கள் அனைவரும் தங்கள் பக்கமே உள்ளதாகக் கூறி வருகின்றனர்.

அதிமுக
இப்போது அதிமுகவில் ஏற்பட்டு உள்ள குழப்பம் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரட்டை தலைமை கீழ் அதிமுக இயங்கிய காலகட்டத்தில் கட்சியால் பெரியளவில் எந்தவொரு வெற்றியையும் பெற முடியவில்லை. சட்டசபைத் தேர்தலில் தொடங்கி அனைத்திலும் தொடர்ச்சியாகத் தோல்விகளையே சந்தித்தது. இந்தச் சூழலில் தான் சிலர் அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்று கூறினர்.

எடப்பாடி
இரு தரப்பிற்கும் இடையே தொடர்ச்சியாகவே பூசல் இருந்து வந்தாலும் கூட, அது பொதுவெளிக்கு வந்தது. இல்லை. இதற்கிடையே ஒற்றை தலைமை என்ற கோஷத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சிக்குக் கூட்டுத் தலைமையே தேவை என்று அவர் வலியுறுத்தினார். இருப்பினும், அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒற்றை தலைமையே ஒரே தீர்வு என்றார் எடப்பாடி.

ஆலோசனை
அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி, இரு தரப்பும் எதிர்த்தரப்பைக் கட்சியில் இருந்து நீக்குவதாக மாறிமாறி அறிவித்து வருகின்றனர். மேலும், பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

பொன்விழா
சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொன்விழா பொதுக்கூட்டங்கள் அக்டோபர் 17 முதல் நடைபெற உள்ள நிலையில், அதைச் சிறப்பாக நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நிர்வாகிகள் நியமனம்
ஓ பன்னீர்செல்வம் கட்சியில் பல புதிய பொறுப்புகளை உருவாக்கி நியமித்து வருகிறார். இதனிடையே அதிமுகவைப் பலப்படுத்துவது குறித்தும், அமைப்பு ரீதியாக காலியாக இருக்கும் இடங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் இதில் சில முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், வரும் 17ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.

உத்தரவு
இதற்கிடையே இது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவை எம்எல்ஏக்களுக்கு பிறப்பித்து உள்ளார். அதாவது சட்டசபையில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக யாரும் எதுவுமே பேசக் கூடாது என்று எடப்பாடி ஸ்ட்ரிக்ட் உத்தரவைப் பிறப்பித்து உள்ளார். மேலும் சட்டசபை நடைபெறும்போது, மக்கள் பிரச்சினை குறித்தும் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் மட்டுமே பேச வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடர்
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இந்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்தச் சூழலில் கட்சி பிரச்சினைகள் எதையும் சட்டசபைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று எடப்பாடி உத்தரவிட்டு உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முன்பு அதிமுக பிளவுபட்டு இருந்த போது, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் என்பது ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications