அரசு டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு எக்ஸ்ட்ரா 10 வாங்குவது ஏன்.. விஜய்க்கு போன விஷயம்.. பின்னணியில் யார்
சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள் மத்தியில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன.. இன்றுகூட திருப்பூரில் புகார்கள் வெடித்துள்ளன.. இதையடுத்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.. இதனிடையே, டாஸ்மாக் கடைகளின் தினசரி நிர்வாக செலவுகளை அரசே ஊழியர்கள் மீது சுமத்துவதால் தான் கூடுதல் பணம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என ஏ.ஐ.டி.யு.சி பணியாளர்கள் சங்கம் முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது..
தமிழகத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மூலமாக மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.. இந்த கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்ட நாட்களாகவே புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் மது பிரியர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.

அரசு டாஸ்மாக் கடைகள்
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.. அரசின் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவை அடுத்து டாஸ்மாக் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதற்கான அசல் காரணம் என்ன என்பது குறித்து முதல்வர் விஜய் மற்றும் உள்துறை செயலர் ஆகியோருக்கு ஏ.ஐ.டி.யு.சி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி மற்றும் பொதுச்செயலர் தனசேகரன் ஆகியோர் ஒரு விரிவான விளக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
பாட்டிலுக்கு 10 ரூபாய்
அந்த கடிதத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், தங்களின் குமுறல்களையும் பணியாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.. டாஸ்மாக் கடைகளின் தினசரி நிர்வாக செலவுகளை அரசு வழங்காமல் ஊழியர்கள் தலையிலேயே சுமத்துவதால் தான் இந்த கூடுதல் வசூல் நடப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.. டாஸ்மாக் கடைகளை நடத்துவதற்கு பல்வேறு நடைமுறை செலவுகள் இருப்பதாக கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது..
அந்த கடிதத்தில் "2 பிரச்னைகள் உள்ளன. ஒன்று காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில், ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலித்து, பின், அந்த பாட்டில் திரும்ப தரும்போது, 10 ரூபாயை திருப்பி தரப்படுகிறது.
மது கடைகள் மூடல்
மற்றொன்று, மது கடைகளின் நிர்வாக செலவுகளை டாஸ்மாக் நிர்வாகம் முறையாக ஏற்காமல், அதை பணியாளர்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு காரணமாக ஏற்பட்டுள்ள குறைபாடு. இது ஊழல், முறைகேடுகளுக்கு வழி வகுத்துள்ளது. இது முற்றிலும் தடுக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட வேண்டும்.
கேரள அரசு நடத்தும் மது கடைகளில் கடைப்பிடிக்கப்படும் நிர்வாக விதிமுறைகளை தமிழக அரசு பின்பற்றி, டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும். மது கடைகள் மதியம், 12:00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10:00 மணிக்கு மூடப்பட வேண்டும். மது விற்பனையில் கணினிமயம் நடைமுறையில் இருப்பதால், விற்பனை முடிந்த பின், 30 நிமிடங்கள் முதல், 90 நிமிடங்கள் வரை கணக்குகளை சரிபார்த்து, இறுதி செய்ய அவகாசம் தேவை.
டாஸ்மாக் பணியாளர்கள்
இந்நிலையில், இரவு, 10:00 மணிக்கு மேல் ஒரு வினாடியும் பணியாளர்கள் கடைகளுக்குள் இருக்கக் கூடாது என டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர்கள் உத்தரவிட்டு, தீவிரமாக அமலாக்க தொடங்கியுள்ளனர்; இது, பணியாளர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. அரசின் கொள்கை முடிவு, நிர்வாக உத்தரவுகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து, பணியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செயல்படுத்த வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடைகளில் உடைந்து போகும் மது பாட்டில்களுக்கான இழப்பு தொகை, மது பாட்டில்களை ஏற்றி இறக்கும் கூலி, கடைகளின் மாதாந்திர மின்சார கட்டணம் ஆகியவற்றை நிர்வாகம் வழங்குவதில்லை என்ற புகார் ஏற்கனவே நிலவி வருகிறது..
மேலும் கடைகளுக்கு தேவையான மெழுகுவர்த்தி, பினாயில், துடைப்பம் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும், கடைகளின் கட்டிட வாடகை, கணக்கு தணிக்கைக்கான செலவுகள், தினசரி விற்பனை தொகையை வங்கியில் செலுத்துவதற்கான வாகன வாடகை உள்ளிட்ட எந்த ஒரு செலவு தொகையையும் டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு ஒதுக்குவதில்லை என்று அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கடிதம் மேலும் பரபரப்பை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications