ஸ்டாலின் கைக்கு போகும் ரிப்போர்ட்.. திமுகவில் விரைவில் மாற்றம்? 36 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் அதிரடி
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சந்தித்த தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக, திமுக தலைமை அமைத்த கள ஆய்வு குழுவினர், தாங்கள் தயாரித்து வைத்துள்ள 14 கேள்விகளுடன் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். உள்ளூர் மட்ட நிர்வாகிகளின் தலையீடு எதுவுமே இல்லாமல் அடிமட்டத் தொண்டர்களின் எதார்த்தமான கருத்துக்களை சேகரிப்பதற்காக இந்த ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நேரடி விசாரணை துவங்கி உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சந்தித்த தோல்விக்கான காரணங்களை அறிய, 234 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்த, 36 பேர் கொண்ட குழுவை கட்சித் தலைவர் ஸ்டாலின் நியமித்தார்..

இந்த குழுவினர் ஒரு தொகுதிக்கு 2 பேர் வீதம் நேரில் சென்று, நேற்று ஆய்வு பணிகளை துவங்கி உள்ளனர்.. இவர்கள், தி.மு.க. தொண்டர்களின் உண்மையான கருத்துகளையும், தோல்விக்கான காரணங்களையும் சேகரித்து திரட்டி வருகிறார்கள்.
கள ஆய்வு நடத்த 36 பேர் கொண்ட குழு
திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் காணப்பட்ட குறைபாடு, உட்கட்சி பிரச்னை, மக்கள் என்ன நினைக்கின்றனர், ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பன உள்ளிட்ட 14 கேள்விகளுடன் விசாரணையை நடத்தி வருகின்றனர்..
இந்த குழுவினர் விசாரணை நடத்தும்போது, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் என யாரும் உடன் இருக்கக்கூடாது என, கட்சி தலைமை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.. ஒரு தொகுதிக்கு செல்லும் 2 பேரும் இணைந்தே, அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து வருகின்றனர்.. ஒவ்வொரு நாளும் ஆய்வு முடிந்த பின், தொகுதியின் அறிக்கையை அன்றைய தினமே நிறைவு செய்து, கள ஆய்வு குழுவில் உள்ள இருவரும் தனித்தனியாக தர உள்ளார்களாம்.
5ம் தேதிக்குள் அறிக்கை
கள ஆய்வில் சேகரித்த விபரங்கள் அனைத்தையும், அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் அறிக்கையாக தயாரிக்கும் ஆய்வு குழுவினர், அதை திமுக தலைவர் ஸ்டாலினிடம் அளிக்க உள்ளனர்.. கள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், கட்சியில் தீவிர மறுசீரமைப்பு மற்றும் அதிரடி மாற்றங்களை எடுக்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக திமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
பொதுவாக எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் தோல்விக்குப் பிறகு உள்ளூர் மட்ட நிர்வாகிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மேல்மட்ட அளவில் மட்டும் கூட்டங்களைக் கூட்டி முடிவெடுக்கும்.
திமுக தலைவர் ஸ்டாலின்
ஆனால், இந்த முறை திமுக தலைமை எடுத்துள்ள இந்த நேரடி நடவடிக்கை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகத் தெரிகிறது.. உள்ளூர் செல்வாக்கு மிக்க மாவட்ட செயலாளர்களையோ அல்லது வேட்பாளர்களையோ விசாரணை நடக்கும் இடத்திற்குள் சேர்க்கக் கூடாது என்று உத்தரவிட்டதன் மூலமே, அடிமட்டத் தொண்டர்களின் உண்மையான மனநிலை தலைமைக்குச் சென்று சேர வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பது தெளிவாகிறது.
உள்ளூர் ஆதிக்கக்காரர்களின் தலையீடு இல்லாததால், இத்தனை காலம் மனதுக்குள் அதிருப்தியை வைத்திருந்த தொண்டர்கள் இப்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளார்கள்.
14 கேள்விகள்
அதேநேரத்தில், இந்த 14 கேள்விகளை வைத்து நடத்தப்படும் ஆய்வும், 2 நபர்கள் தனித்தனியாகத் தரும் அறிக்கைகளும் கட்சியின் உண்மை நிலையைத் தலைமைக்கு அப்படியே கொண்டு சேர்க்கும் என்றே நம்பப்படுகிறது.
வரும் 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான், தி.மு.க.வில் பெரிய அளவில் நடத்தப்பட உள்ள மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்த முழு விவரமும் தெரியவரும்.. தேர்தல் தோல்வியால் சோர்ந்து போயிருக்கும் தொண்டர்களைத் தட்டியெழுப்பவும், கட்சியில் தேங்கியிருக்கும் பலவீனங்களை அறுத்தெறியவும் இந்த அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கை திமுகவுக்கு மிகவும் தேவையான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது....!!












Click it and Unblock the Notifications