மீண்டும் குட்டையை குழப்பும் அமெரிக்கா.. ஈரானுக்கு எதிராக வாயை விட்ட தூதர்! அமைதிக்கு வாய்ப்பு இல்லை!
நியூயார்க்: ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் ஈரானுக்கு எதிராக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் விடுத்துள்ள மிரட்டலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், ஈரானின் இந்த நடவடிக்கை எவ்வகையிலும் தற்காப்பு நடவடிக்கையாகக் கருதப்படாது என்று கூறினார்.

அமெரிக்கா இப்படி பேசியிருப்பதால் ஈரான் கடும் ஆத்திரமடைந்திருக்கிறது. அமைதி ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்க அதிகாரிகள் இப்படி வாய்க்கு வந்தபடி பேசுவதெல்லாம் எப்படி சரியாக இருக்கும்? என ஈரான் கொந்தளித்துள்ளது.
அமெரிக்கா பேசியது என்ன?
சர்வதேச நீர்வழிகளை மூடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது உலகப் பொருளாதாரத்தை முடக்கும் ஒரு 'சர்வதேச மிரட்டல்' என்று அமெரிக்கத் தூதர் கூறியிருக்கிறார். ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைத் தடுப்பதன் மூலம் உணவு, உதவிப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்தால், அந்நாட்டின் ராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று வால்ட்ஸ் எச்சரித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ராஜதந்திர ரீதியிலான தீர்வுகளுக்கு வாய்ப்பளிப்பார், ஆனால் அவரது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.
பின்னணி
சமீபத்தில் ஹார்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இதனை தொடர்ந்துதான் தற்போது மைக் வால்ட்ஸ் மேற்குறிப்பிட்டவாறு பேசியிருக்கிறார். இவரது பேச்சு இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படும் அமைதி ஒப்பந்தத்தை மேலும் தள்ளி போட செய்யதிருக்கிறது.












Click it and Unblock the Notifications